top of page
Featured Posts

என் வாழ்வில் மஹாபெரியவா -048


என்னை ஆளும் ஈஸா சபேசா

என் வாழ்வில் மஹாபெரியவா -048

பிரதி வியாழன் தோறும்

ஆத்ம சுத்தி

வாழ்க்கையில் நான் கற்றது

வாழ்க்கையில் கண்ணீர் அவமானமில்லை

ஏமாற்றி வெற்றி பெறுவதைவிட மரியாதையாக

தோற்றுப்போவது மரியாதையானது

கீழே கிடக்கும் ஆயிரம் ரூபாயை விட உழைத்து

சம்பாதிக்கும் பத்து பைசா உனக்கு நம்பிக்கையை கொடுக்கும்

&&&&&&

சென்ற வாரம் மருத்துவரிடம் சென்றோம். என் வாய் புண்ணிற்கு ஒரு வாரம் ஒரு களிம்பை போட்டுகொள்ளச்சொல்லி கொடுத்தார். ஒரு வாரம் உபயோகித்தும் எந்த முன்னேற்றமும் காணோம்.எல்லோரும் அவர்களுக்கு தெரிந்த வைத்தியங்களையும் மருத்துவ மனைகளையும் சொன்னார்கள்.

நான் அனுபவிக்கும் வலியை காரணம் காட்டி நான் காயத்ரி சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் மஹாபெரியவா அதை விரும்பமாட்டார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆகவே நான் வலியை பொறுத்துக்கொண்டே காயத்ரி ஜெபித்து விடுவேன்.

ஆயிரக்கணக்கில் காயத்ரி சொல்ல முடியாவிட்டாலும் என்னால் எவ்வளவு சொல்லமுடியுமோ அவ்வளவு காயத்ரி சொல்லி விடுவேன். காயத்ரி சொல்லி முடிக்கும் பொழுது வாயில் இருந்து ரத்தம் வருவதை யாருக்கும் தெரியாமல் கொப்பளித்து துப்பிவிடுவேன்.

G.R.: மஹாபெரியவா முன் வந்து நின்று கொண்டு சொல்வேன், "பெரியவா என்னால் முடிந்தமட்டும் காயத்திரி சொன்னேன். ரத்தம் வந்துண்டே இருக்கு பெரியவா என்றேன்.

பெரியவா: நீ உ மனசாட்சிக்கு விரோதம் இல்லாம காயத்ரி சொன்னே. இந்த பக்திக்கு உனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். கவலை படாதே.என்றார்.

G.R மருத்துவரிடம் செல்ல இன்னும் ஐந்து நாட்கள் உள்ளது.அதற்கு பிறகு தான் என் வாய் வலிக்கு விமோச்சனம்.

அடுத்த நாள் காலையில் இருந்து நான் வலி தெரியாமல் இருக்க ஒரு யுக்தியை கையாண்டேன். என் கற்பனையில் மனத்திரையில் ஒரு காட்சியை உருவாக்கிக்கொள்வேன். காட்சியின் விவரம் இதோ உங்களுக்காக,

கைலாயத்தில் மஹாபெரியவா மேகங்களுக்கு நடுவே ஒரு பனி படர்ந்த மலையின் முகட்டில் கால்மேல் கால்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். நான் அந்த மலையின் கீழே மஹாபெரியவா காலடியில் அமர்ந்து காயத்ரி சொல்லிக்கொண்டிருக்கிறேன். மஹாபெரியவா நான் சொல்வதை உற்று பார்க்கிறார். நானும் ஜாக்கிரதையாக சொல்லுகிறேன்

இந்தக்காட்சியை அனுபவித்துக்கொண்டே காயத்ரி சொல்வேன், வலி மறந்து விடும். ஐந்து நாட்களும் இதே போல் காயத்ரி சொன்னேன் . வெறும் ஆயிரம் காயத்திரி சொன்னாலும் அதன் வலி எனக்கு தெரியாது. ஆனால் இந்த உபாதையிலும் சொன்னேனே என்ற திருப்தி இருக்கும்.

வாழ்க்கையில் எல்லா விஷயங்களுமே இப்படித்தான். ஒரு காரியத்தை செய்யாமல் இருக்க காரணம் ஆயிரம் தேடலாம். ஆனால் அந்த காரியத்தை எப்படியாவது செய்து விடவேண்டும் என்ற மனம் இருந்தால் செய்து விடுவோம்.. மனம் இருந்தால் போதும். இது நம் எல்லோருக்குமே..

ஐந்து நாட்களும் என் வலியும் குறையவில்லை. ரத்தம் வருவதும் நிற்கவில்லை. என் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவலை அடைந்தார்கள்.உங்கள் பெரியவா உங்களை விட்டுட்டார். நீங்கள் தான் பெரியவா பெரியவா உருகுகிறீர்கள் . எல்லாம் தலை விதி. என்றார்கள்.

நான் அவர்களிடம் கெஞ்சினேன். தயவு செய்து மஹாபெரியவாளை தூஷிக்காதீர்கள். மஹாபெரியவா நினைத்தால் வானமே இடிந்து விழுந்தாலும் என் தலைக்கும் வானத்திற்கும் ஒரு மில்லிமீட்டர் இடைவெளி இருக்கும் வரை நான் நம்பிக்கை இழக்க மாட்டேன். தயவு செய்து பொறுமையாக இருங்கள். என்றேன்.

அப்படி சொல்லும் பொழுதே எம் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஒரு புறம் இவர்கள் அபச்சாரம் செய்து விடக்கூடாதே என்றகவலை. மறு புறம் தாங்க முடியாத வலியால் கண்கள் அழுகின்றன. நான் மஹாபெரியவாளிடம் சென்று வேண்டினேன்.

G.R.:: பெரியவா என் வீட்டில் உள்ளவர்கள் அறியாமல் ஏதாவது சுடு சொல் சொல்லி விட்டால் தயவு செய்து அவர்களை குழந்தைகளாக ஏற்று மன்னித்து விடுங்கள் பெரியவா என்றேன்.

பெரியவா: நான் எப்பவுமே அப்படிதானேடா. மனுஷா இப்படித்தான் பேசுவாள் செய்வாள். இது கலி காலம். நீ ஒன்னும் கவலை படமா டாக்டர்கிட்டே போய்ட்டு வா என்றார்.

G.R. பெரியவா எனக்கு புற்று நோய் இருக்காது இல்லையா பெரியவா? என்றேன்.

பெரியவா: என்னவேண்டுமானாலும் நடக்கட்டும். கடைசியில் உனக்கு புற்று நோய் இருக்காது. இதற்கு நான் ஆசிர்வாதம் பண்ணறேன் என்றார்.

ஐந்தாவது நாள். மாலையில் நானும் என் மனைவியும் மருத்துவமனைக்கு சென்றோம். மருத்துவரை காண எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஏழு மணி. என் மனைவி கண்ணீர் விடுகிறாள்.எனக்கும் அழ வேண்டும் போல் இருந்தது. நான் அழுதால் என் மனைவிக்கு நம்பிக்கை போய் விடும்.நான் அழுகையை அடக்கிக்கொண்டேன்.

எங்களை மருத்துவர் உள்ளே அழைத்தார்,. சாய்வு நாற்காலியில் படுக்க வைத்து வாயில் வெளிச்சம் போட்டு வாய் புண்ணை பார்க்கிறார். பார்த்து விட்டுப் புண் அப்படியே தான் இருக்கிறது. என்றார்.

இப்பொழுது உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்போகிறேன். வலிக்காமல் இருக்க ஒரு ஊசி போடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள். என்றார். நான் மஹாபெரியவாளை மனதில் வேண்டிக்கொண்டே மஹாபெரியவாளை காற்றில் தேடுகிறேன்.சிகிச்சை ஆரம்பித்து விட்டது.

இரண்டு மருத்துவர்கள் கத்தியையும் கத்திரிக்கோலையும் வைத்து கொண்டு முகத்தில் முகமூடி போட்டுகொண்டு நான் சிகிச்சையை ஆரம்பிக்க போகிறேன் என்று தலையை ஆட்டி தயாரா என்று கேட்கிறார். நானும் செய்யுங்கள் என்று தலையை ஆட்டுகிறேன்.

என் வாயில் கத்திரிக்கோலை விட்டு புண்ணை கத்திரிகிறார்கள். ரத்தம் கொட்டுகிறது. ஒரு மருத்துவர் துடைத்து விட்டுக்கொண்டே இருக்கிறார்.எனக்கு ஒரு புறம் தாங்க முடியாத மரண வலி.. மறுபுறம் இது புற்று நோய் என்று சொல்லிவிட்டால் என் வாழ்க்கை இன்னும் எவ்வளவு காலம். நினைத்தாலே வலி அதிகமாகிறது. .

நான் மஹாபெரியவா என்று மனதிற்குள் அழைக்கிறேன் . என்னைஆச்சரியம் எனக்கு சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு பின் பின்புறம் காவி வஸ்திரம் என் கண்களுக்கு தெரிந்தது.

நான் மஹாபெரியவளின் கருணையை நினைத்து நினைத்து உருகினேன்.என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.நான் அழுவதை பார்த்த மருத்துவர் ஏன் உங்களுக்கு வலிக்கிறதா? என்று கேட்டார். நானும் இல்லை டாக்டர் நீங்கள் சிகிச்சையை செய்யுங்கள். எனக்கு வலிக்கவில்லை. நான் காவி வஸ்திரத்தை பார்த்த மறு வினாடி எனக்கு வலி தெரியவில்லை.

ஒரு அரை மணி நேரத்தில் தையல் போட்டு புண்ணை தைத்து விட்டார்கள். அன்று இரவு மட்டும் எதுவும் சாப்பிட வேண்டாம் என்றார்கள். என் மனைவி மருத்துவரிடம் கேட்டாள் டாக்டர் ஒன்னும் பயம் இல்லையே என்று.

டாக்டர் சொன்னார் இது ஒரு சாதாரண புண்ணாக இருந்திருந்தால் இத்தனை நாட்களுக்குள் ஆறியிருக்கும். இன்னும் ஆராததால் தான் இன்று அறுவை சிகிச்சை செய்து தையல் போட்டோம்.. எதுவும் சொல்ல முடியாது என்றார். அன்றே என் புண்ணில் இருந்து சிறு பாகத்தை கத்தரித்து பரிசோதனைக்கு அனுப்பினார்கள். சரியாகஒரு வாரம் கழித்து வந்து பார்க்க நேரம் ஒதுக்கியிருந்தார்கள்.

நானும் என் மனைவியும் மிகவும் கனத்த இதயத்துடன் எதுவும் பேசாமல் வீடு திரும்பினோம்.இருவர் கண்களிலும் கண்ணீர். யார் யாருக்கு ஆறுதல் சொல்ல..

இரவு ஒன்பது மணி. நான் எதுவும் சாப்பிடவில்லை.மஹாபெரியவா முன் போய் நின்றுகொண்டேன். என்னால் வாய் திறந்து பேச முடியவில்லை, மௌனத்தில் அழுதேன். மௌனமொழியிலேயே பேசினேன்.

G.R.: பெரியவா இன்னிக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். ரொம்ப வலித்தது பெரியவா. உங்களை அழைத்தேன்.உங்கள் வஸ்திரத்தை நான் அங்கு பார்த்தேன். உடனே வலி சரியாக போய் விட்டது பெரியவா. டாக்டர்கள் புற்று நோயின் அறிகுறி இருப்பதாக சொல்கிறார்கள்.

கொஞ்சம் சதையை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறார்கள் . இன்னும் ஒரு வாரத்தில் முடிவுகள் தெரியவரும் பெரியவா என்றேன். நான் மேலும் கேட்டேன் பெரியவா நிச்சயம் புற்று நோய் இருக்காது இல்லையா பெரியவா என்றேன்

பெரியவா: எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேண்டா நீ கவலை படாம இரு என்றார்.

மேலும் ஒரு வாரத்திற்கு நான் கவலையுடனும் பயத்துடனும் வாழ வேண்டும். தையல் போட்ட இடத்தில் வீங்கியது போல இருந்ததால் என்னால் சரியாக சாப்பிட கூட முடியவில்லை.

இரண்டு நாளுக்குள் என் சொந்தங்களுக்குள்ளும் நட்பு வட்டாரங்களிலும் எனக்கு புற்று நோய் வந்திருப்பதாக முடிவே செய்து அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.உலகிலேயே கொடுமையான வலி புற்று நோயின் வலிதான் என்று ஒருவர் பேசுகிறார்.

சொந்தங்கள் எனக்கு அறிவுரையும் தைரியமும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சில சொந்தங்கள் சொல்லுகின்றனர் என்னதான் வலி இருந்தாலும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் பத்து ஆண்டுகளாக இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் சில சொந்தங்கள் சொல்லுகின்றனர். புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அன்றிலிருந்து ஆறு மாதமோ ஒரு வருடமோ உயிர் வாழலாம் என்கிறார்கள். இத்தனையும் ன் கண் முன்னே அரங்கேறுகிறது.

எனக்கு உலகத்தின் மீதே வெறுப்பு வந்தது. என்னுடைய ஆயுளை யார் தீரணிப்பது. யமனல்லவா. என் கண்களில் இவர்கள் எல்லோருமே எமனாக தெரிந்தார்கள்.மற்றவர் ஆயுள் என்றால் எப்படியெல்லாம் ஏலம் போடுகிறார்கள். இவர்கள் மார்கண்டேயர்களா என்ன?

எனக்கு இந்த கலி காலத்தில் வாழ்வதை விட இறந்து போவது எவ்வளோவோ மேல் என்று தோன்றுகிறது . என்ன இது கொடுமை

எனக்கு மட்டும் ஒரு நாக்கு

சமுதாயத்திற்கு மட்டும் பல நாக்குகள்

ஒரு நாளின் உதயத்தில் இருந்து அஸ்தமனம் வரை எத்தனை எத்தனை அனுபவங்கள். அவர்களுக்கு ஒரு நீதியும் நியாயமும் மற்றவர்களுக்கு நேர் எதிர்மறையான ஒரு நியாயமும் நீதியும்..

அவர்கள் தவறுக்கும் தப்புக்கும் மிகச்சிறந்த வக்கீல்களாகவும் மற்றவர்கள் தவறுக்கு கண்டிப்பான நீதிபதியாகவும் மாறி விடுகின்றனர். இதையெல்லாம் எங்கு போய் சொல்ல? . யாரிடம் சொல்ல?

உடல் புற்று நோய்க்கு கூட மருந்து இருக்கிறது.இந்தசமுதாயத்தின் புற்று நோய் நொடிப்பொழுதும் தீவிரமடைந்து வளர்கிறதே.இவையெல்லாம் தான் எனக்கு சம்சார வாழ்க்கையின் மீது ஒரு வெறுப்பை உண்டாக்குகிறது.

ஏழாவது நாள் பரிசோதனை முடிவுகள் வரும் நாள். நானும் என் மனைவியும் மருத்துவமனைக்கு செல்கிறோம். அங்கு நடந்த மஹாபெரியவா அற்புதத்தை சொல்ல வார்த்தை இல்லை. அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் நடந்த போரில் எது வென்றதை அடுத்தவாரம் அனுபவிப்போம்.

உளி வலியென விழுந்தால்

கற்கள் சிற்பமாகுமா?

என் மீது வாழ்க்கை அனுபவம் என்னும் உளி

அடிக்கும் பொழுதெல்லாம்

நான் சிற்பமாக வடிக்கப்படுகிறேன்

என் வலியை பொறுத்துக்கொள்கிறேன்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள்

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page