Feed back on என் வாழ்வில் மஹாபெரியவா by Mrs.Padmasini Sridar.

சாத்தியம் இல்லாததையும் சாத்தியம் ஆக்கும் சத்திய தெய்வமே நின் பாதங்கள் சரணம் என் வாழ்வில் மஹாபெரியவா சரணம்
-G.R.Mama-
அன்புடையீர்!
நமஸ்காரம்.
'என்வாழ்வில் மஹாபெரியவா'
என்னும் நூல் ஒரு உணர்ச்சிப் பெட்டகம். "உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுப்பது தான் ஒரு புத்தகத்தின் சிறப்பு" என்று கூறும் நூலாசிரியரின் கருத்து முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
வரிக்கு வரி ஆசிரியரின் உள்ள உணர்ச்சி - மகாபெரியவா மேல் ஏற்பட்ட பத்தி _ அரும்பாகி போதாகி அலர்ந்து, மலர்ந்து பூத்து அவரது சென்னிக்குச் சூட்டும் பூமாலையாயிற்று.
தமிழ் தாய்மொழி என்றாலும், தமிழ் இலக்கணம் ஆசிரியருக்கு வேப்பங்காயாகத் திகழவில்லை; மாறாகத் தித்திக்கும் தேனாய்த் தெவிட்டாத தெள்ளமுதாய் இருப்பதால் , மடை திறந்த வெள்ளம் போல மஹா பெரியவா தம் மீது கருணையை ஆங்காங்கே வெளிப்படுத்துகின்றார்.
"உள்ளத்துள் உள்ளானடி_ அதை உணர வேண்டுமடி" என்ற பாடலுக்கு ஏற்ப இறைவனைக் கண்டு வழிபட்ட சிறப்புக்கு உரியவர்கள் குலத்தால் தாழ்ந்த நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் ஆவர். இந்நூலாசிரியர் வைணவ பரம்பரையைச் சார்ந்தவராயினும் , மகாபெரியவா அவர் உள்ளம் கவர்ந்த ஞானப்பிழம்பு; கருணைக் கடல்.
அடியவர் மீது இறைவனுக்கு விருப்புவெறுப்புஇல்லை; ஏற்றத்தாழ்வு இல்லை:அன்பே அடிப்படைக் காரணம்.இதை நன்கு உணர்ந்தவர் இந்நூல் ஆசிரியர். அதனாலன்றோ மஹா பெரியவா தம் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்களை- இந்நூலைப் படிப்பவர்கள் மெய்சிலிர்க்கும் வண்ணம் எழுதியுள்ளார்.
மஹா பெரியவா அருளால் நாமும் பசியும் பிணியும் நீங்கி வசியும் வளமும் பெற்று வாழ்வோம்.
ஹர ஹர சங்கர ! ஜெய ஜெய சங்கர!
பத்மாஸனி