விஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்

பெரியவா எங்களுக்கெல்லாம் பகல் இரவு இரண்டுமே உண்டு பகலில் வாழ்கை என்ற பெயரில் வாழுவோம் இரவில் தூக்கம் என்ற பெயரில் உறங்குவோம் ஆனால் உனக்கு மட்டும் எப்பொழுதுமே பகல் தானே விஷ்ணுமாயாவின் கூக்குரலை கேட்டு நடு இரவில்ஓடி வந்து குழந்தையின் உயிரை காப்பாற்றி கொடுத்த உன் காருண்யத்திற்கு இந்த பிரபஞ்சம் கூட இணையாகாதே பெரியவா நீங்கள் என்றும் எப்பொழுதும் எங்களுக்கு வேணும் நீ இல்லாமல் நாங்கள் இல்லை
விஷ்ணுமாயா எதிர்கொண்ட மற்றுமொரு குருபூஜை அற்புதம்
“வழிபாடு சரியாக இருக்குமானால்
இறைபாடு தானாகவே வாய்க்கும்”
நாள்:21/10/2016 நேரம்:அதிகாலை இரவு மணி 2.00
கூப்பிட்ட குரலுக்கு இறைவன் வருவான் என்பது நாமெல்லாம் அறிந்த அனுபவமொழி. ஆனால் கூப்பிட்ட குரலுக்கு இறைவன் வருவானா?, வந்த நிகழ்வுகள் உண்டா?. நாம் வாழ்ந்த காலத்தில் இது நாள் வரையில் இல்லை என்ற பதில்தான் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் மஹாபெரியவா குரு பூஜை இந்த அனுபவமொழியை உண்மை மொழி ஆக்கியிருக்கிறது.
ஆம் விஷ்ணுமாயாவின் தொடர் அற்புதங்களே இதற்கு ஒரு சான்று. இப்படியொரு அற்புதம் இந்த அக்டோபர் மாதம் இருபத்தியொன்றாம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு நடந்தேறியது. இந்த அற்புதத்தை இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு நீங்கள்படிப்பதாக நினைத்துக்கொண்டு படியுங்கள். ஏனென்றால் நான் இந்த அற்புதத்தை எழுதுவது இந்த ஆண்டு இன்று.
இருபத்திரெண்டாம் தேதி காலை நான் சமயலறையில் சமைத்துக்கொண்டிருந்தபோது என் கைபேசி என்னை அழைத்தது. மறு முனையில் விஷ்ணுமாயா.. ஆனால் பேச்சுக்கு பதில் அழுகுரல் தான் கேட்டது.
நானும் செய்வதறியாது சிறிது அமைதியாக இருந்தேன். விஷ்ணுமாயாவே என் மௌனத்தை கலைத்தாள். செய்தியின் சாராம்சம் இதுதான்.
" நேற்று அதிகாலை இரவு மணி இரண்டு. விஷ்ணுமாயாவின் இரண்டு வயது குழந்தைக்கு மிகுந்த காய்ச்சலால் உடம்பு கொதித்தது. சுவாசத்திற்கு மிகவும் சிரமப்பட்டான். உடம்பு துவண்டிருந்தது. என்ன பேச்சு கொடுத்தாலும் துவண்டு விழுந்தான்.
விஷ்ணுமாயாவின் நெஞ்சம் கனத்தது. கண்களில் கண்ணீர் பெருகியது. அந்த அகால வேளையில் எங்கே போவது. எந்த டாக்டர் இருப்பார். அகபக்கம்பக்கத்தார் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
விஷ்ணுமாயா மஹாபெரியவா குரு பூஜை செய்து வருவதால் மஹாபெரியவா நினைவாகவே மஹாபெரியவா பெயரை சொல்லிக்கொண்டும் நினைத்துக்கொண்டும் இருந்தாள். மஹாபெரியவா ஆபத்பாந்தவன் என்னும் நினைவு வந்தவுடன் குழந்தயை மஹாபெரியவாளிடம் தூக்கி சென்றாள். இரண்டு நிமிடங்கள் கண்ணை மூடி த்யானம் செய்துவிட்டு நான் சொல்லிக்கொடுத்தபடி மஹாபெரியவாளிடம் பேச ஆரம்பித்தாள்.
"மஹாபெரியவா, எனக்கு இந்த அகால வேளையில் உங்களைத்தவிர எனக்கு யாரையும் தெரியாது.. என் குழந்தைக்கு உடம்பு அனலாய் கொதிக்கிறது. உடம்பு துவண்டு விழுகிறது. பேச்சு மூச்சு இல்லை. உங்க விபூதிதான் என் குழந்தைக்கு மருந்து.
இந்த விபூதியை நீங்கள் கொடுத்த மருந்தாக நினைத்து நெற்றியிலே இடுகிறேன். உள்ளுக்கும் மருந்தாக கொடுக்கிறேன். என் குழந்தை சீக்கிரம் கண் முழிக்கவேண்டும். வழக்கம் போல் இருக்கும் என் குழந்தை எனக்கு வேண்டும்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்று பெரியவா மந்திரத்தை உச்சரித்துவிட்டு.குழந்தயை தன் பக்கத்திலிருக்கும் அவன் படுக்கையில் படுக்கவைத்தாள்.
படுக்கவைத்ததுதான் தாமதம். குழந்தை வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு சப்தமாக அழுதான். சுவாசமும் சரியாயிற்று. ஜூரமும் குறைந்தது.
சற்று நினைத்துப்பாருங்கள். விவாக ரத்து கோரும் கணவன்.வயதான பெற்றோர்கள். பெற்றோர்கள் காலத்திற்கு பின் தனக்கென்று இறைவன் கொடுத்த ஒரே சொந்தம் இந்த குழந்தைதான். அம்மாவும் குழந்தையும் ஈருடல் ஓருயிர் என்னும் நிலைதானே.
தாய் விஷ்ணுமாயா வயிற்றில் பெரியவா பாலை வார்த்தார்.
குழந்தை தூங்கிய பிறகு விஷ்ணுமாயா மஹாபெரியவா முன்னாள் உட்கார்ந்துகொண்டு அழுதுகொண்டே அனுகிரஹத்திற்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார். விஷ்ணுமாயாவும் அப்படியே தூங்கி விட்டாள். குழந்தையும் கண்ணை மூடி தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்தான்.
இத்தனை அற்புதத்திற்கு சான்று வேண்டாமா?
இதோ பின் வரும் இந்த கனவுதான் சான்று.
சரியாக காலை நான்கு மணி சுமாருக்கு விஷ்ணுமாயாவிற்கு ஒரு கனவு.
வாசலில் மாக்கோலம் போட்டிருக்கிறது.கோலத்தின் நடுவில் மஹாபெரியவா ஸ்ரீ பாதம் (திருவடி ) மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்து வீடுகளில் ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்னும் மஹாபெரியவா நாம சங்கீர்த்தனம் கேட்கிறது. கனவும் முடிந்துவிடுகிறது
இரவு நடந்த சம்பவத்திற்கும் காலை வந்த கனவுக்கும் ஒரு நெருக்கமான சம்பந்தம் இருப்பதை உணர முடிகிறதா உங்களால்..
உணர்வு இது தான்." நான்தான் இரவு வந்து குழந்தயை என்னுடைய விபூதி மருந்தை கொடுத்து குணமாக்கினேன்.முதலாவது விஷ்ணுமாயா செய்யும் மஹாபெரியவா குரு பூஜை மஹாபெரியவாளுக்கு மிகவும் திருப்தியை கொடுத்துவிட்டது.
கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்க்கும் கண்கண்ட ஒரே தெய்வம் நம் மஹாபெரியவா என்பது இதனால் நமக்கு மட்டும் இல்லை இந்த உலகத்துக்கும் அறிவிக்கும் ஒரு செய்தி.
இதுவரை இறையருளை சொல்லக்கேட்டிருக்கிறோம். புராணத்தில் படித்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு உண்மை பக்தர் வாழ்விலும் கூடவே வாழ்ந்து நம் கை விரல்களை பற்றிக்கொண்டு வாழ்க்கையென்னும் பாதையில் நம்மை தடுமாறாமல் வாழ்க்கைப்பாதையில் கூடவே வந்து வழிநடத்திக்கொண்டிருப்பது நம் மஹாபெரியவா என்பதில் இன்னுமா சந்தேகம்.
“வழிகாட்டும் அம்புக்குறி
வழியை மட்டும்தான் காட்டும்
ஆனால் மஹாபெரியவா
வழிகாட்டும் அம்புக்குறி மட்டுமல்ல
வாழ்க்கையின் வழியில் கூடவே
நடந்து வரும் ஒரு வாழ்க்கை
பயணத்தின்வழித்துணை
கோடியை கொட்டிக்கொடுத்தாலும்
கிடைக்காத பயணம்
வாழ்க்கைத்துணை”
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்