top of page
Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-ஸ்வர்ணமால்யா


குரு பூஜை அற்புதங்கள்-பாகம்-III-ஸ்வர்ணமால்யா

“நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டுனமானால்

பொருள் உன்னைவிட்டு போவது முக்கியமல்ல

நீ பொருளை விட்டு விலகவேண்டும்”

காஞ்சிபுரத்தில் அதிஷ்டான பிரார்த்தனையை முடித்துக்கொண்டு மஹாபெரியவாளின் அற்புதங்களை அனுபவித்துவிட்டு அவர்களுடைய ஊருக்கு சென்று சேர்ந்தனர். மறு நாள் காலை புதன் கிழமை.

என் கனவில் மஹாபெரியவா தரிசனம்

எனக்கு புதன் கிழமை அதி காலை மஹாபெரியவா கனவில் தரிசனம் கொடுத்து கீழ் வருமாறு சொன்னார்.

"ஸ்வர்ணமால்யாவிற்கு அவளை பிடித்த பேய் போயிடுத்துடா. அவள் வேலைக்கும் அனுக்கிரஹம் பண்ணியாச்சு. இன்னமே சுபிட்ஷமா இருப்பா. தன்னுடைய அற்புத அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் பல குடும்பங்களில் விளக்கேற்றி வைப்பாள். நீ தான் நன்னா எழுதுவையே இவள பற்றியும் எழுது”

என்று சொல்லி தரிசனத்தை நிறைவு செய்து மறைந்து விட்டார்.

எனக்கு தரிசனம் கொடுத்த அடுத்த வினாடி

ஸ்வர்ணமால்யாவின் தங்கை கனவிலும்

தரிசனம் கொடுத்து என்னிடம் சொன்ன

அதே செய்தியை அவளிடம் சொன்ன அற்புதம்

எனக்கு கனவு தரிசனம் கொடுத்து ஸ்வர்ணமால்யாவைப்பற்றி சொன்னது அற்புதமென்றால் இதை விட அற்புதம் அதே நேரத்தில் ஸ்வர்ணமால்யாவின் தங்கையின் கனவிலும் தரிசனம் கொடுத்து என்னிடம் சொன்ன விவரங்களை அவளிடம் சொன்னது அற்புதத்திலும் அற்புதம்.

ஸ்வர்ணமால்யாவின் குடும்பத்தினருக்கு ஒன்றும் புரியவில்லை. இப்படியும் நடக்குமா!. ஸ்வர்ணமால்யாவின் மன நிலையை சொல்லவும் வேண்டுமா. மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டாள்.

நினைத்துப்பாருங்கள். பத்து வருடங்களாக இரவு பகலாகவும் பகல் இரவாகவும் பேய்க்கு பயந்து பயந்து வாழ்க்கை. மாலையில் விளக்கு வைக்கும் நேரம் வந்துவிட்டால் வீட்டில் உள்ளோருக்கு நெஞ்சை உலுக்கும் ஒரு பயம் நெஞ்சை பிசையும். பேய் அவள் உடம்பில் புகுந்து விட்டால் எல்லோரையும் கீழே தள்ளி விடுவது. எல்லோரிடமும் சண்டை போடுவது என்பது வழக்கமாக இருந்தது.

அக்கம் பக்கத்து வீடுகளில் ஸ்வர்ணமால்யாவை ஒரு பயத்துடன் பார்ப்பது. அவர்களுக்குள்ளேயே காதோடு காதாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது. ஒரு பக்கம் பேய் பயம் மற்றோரு புறம் சமுதாயத்தின் வீண் திண்ணை பேச்சுக்கள். இதை விட ஒரு கசப்பான அனுபவம் யாரால் தாங்க முடியும்.

ஆனால் காஞ்சி அதிஷ்டானம் சென்று வந்த பிறகு மனதில் விவரிக்க முடியாத தைரியம் ஆழமான பக்தி அசைக்கமுடியாத மஹாபெரியவா நம்பிக்கை. ஸ்வர்ணமால்யாவின் பேச்சிலேயே உறுதியான தன்னம்பிக்கை ஒலித்தது.

இந்த கனவு விஷயத்தை ஸ்வர்ணமால்யாவிடம் சொன்னபோது அவள் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்tடாள். நான் அவளிடம் சொன்னேன் இந்த ஆச்சர்யம் ஒரு ஆரம்பம் தான். உன்னுடைய முழு வாழ்க்கையின் உச்சகட்ட வளர்ச்சிக்கு ஒரு ஆரம்பம். நீ வாழ்க்கையின் உச்சத்திற்கு போவது சர்வ நிச்சயம்.

சமுதாயத்தின் திண்ணைப்பேச்சா

தன்னுடைய வாழ்க்கையா

தன்னுடைய வாழ்க்கையே என்ற முடிவெடுத்த

தைரியசாலிப்பெண் ஸ்வர்ணமால்யா

இந்தக்கனவு தரிசனத்திற்கு பிறகு ஸ்வர்ணமால்யாவிற்கு எந்த பயத்தையும் வீண் பேச்சுக்களையும் புறம் தள்ளும் தைரியம் வந்து விட்டது. இருக்காதா பின்னே. அந்த பரமேஸ்வரனே தன்னுடன் இருக்கும் பொழுது சமுதாயம் என்ன வீண் பேச்சென்ன. எல்லாம் வினாடியில் காணாமல் போனது.

இந்த நிலையில் நான்

ஸ்வர்ணமால்யாவிற்கு

சொன்ன அறிவுரை

iபிரபஞ்ச கடவுளின் மொத்த அவதாரம் தான் மஹாபெரியவா. மஹாபெரியவாளின் அனுக்கிரஹம் என்றுமே பொய்க்காது. நீ மஹாபெரியவாளுக்கு நன்றிக்கடனாக ஏதாவது செய்யநினைத்தால் உன்னை போல எந்த ஆத்மா வாழ்க்கையில் தோற்கும் நிலையில் இருந்தாலும் மஹாபெரியவாளை கை காட்டி அவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றுவதுதான் மஹாபெரியவாளுக்கு நீ செய்யும் நன்றிக்கடன்.

ஸ்வர்ணமால்யா என்னிடம் சொன்னது

அங்கிள் நான் என் கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். நிச்சயமாக யாரையும் வாழ்க்கையில் தோற்க விடமாட்டேன். என்று என்னிடம் உறுதியளித்தாள்.

நான் மீண்டும் கூறினேன்.

ஸ்வர்ணமால்யா வாழ்க்கையில் யாரும் தோற்கக்கூடாது. நான் தோல்வியின் வலியை அனுபவித்தவன். அவமானத்தை எதிர்கொண்டவன். தோற்கும் நிலையில் இருப்பவனுக்கு என் கைகளை நீட்டி அவன் கரங்களை என் முழு சக்தியையும் தாண்டி கரையேற்ற முயற்சி செய்வேன். நீயும் இந்த கொள்கையில் உறுதியாக இரு. என்று அறிவுரை சொன்னேன்.

இறைவன் செய்யவேண்டிய வேலையை

நீ செய்யும் பொழுது

உனக்கு தேவையானது கேட்காமலேயே கிடைக்கும்.

கடவுளும் உனக்கு துணையாக இருப்பான்

மஹாபெரியவா சரணம்

நான் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிவிட்டு தொலைபேசியை துண்டித்து விட்டேன். என்னுடைய வழக்கமான எழுத்துப்பணியில் ஈடு பட்டேன். எழுதிக்கொண்டிருக்கும்பொழுதே எனக்கு மஹாபெரியவா சொன்னது நினைவுக்கு வந்தது. ஸ்வர்ணமால்யாவிற்கு வேலை கிடைக்கும் என்று மஹாபெரியவா சொன்னாரே எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லையே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

சரியாக இரண்டு மணிக்கு என் கைபேசி என்னை அழைத்தது. மறு முனையில் ஸ்வர்ணமால்யா.நான் விவரம் கேட்டேன். ஸ்வர்ணமால்யா என்னிடம் சொன்னது.

மஹாபெரியவாளின் விஸ்வரூப அற்புதம்

"மாமா எனக்கு ஒரு கல்லுரியில் இருந்து ஆங்கில விரிவுரையாளர் வேலைக்கு நேர் காணலுக்கு அழைத்திருக்கிறார்கள் என்று சொல்லி முடிக்க வில்லை.. நான் சந்தோஷத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன். ஏன் தெரியுமா மஹாபெரியவா கூடவே இருந்து கொண்டு அனுகிரஹமும் ஆசிர்வாதமும் செய்து கொண்டிருக்கிறார் என்று எல்லோரிடமும் சொல்லி வருகிறேன்.

மஹாபெரியவா நம்மிடம்

வாழ்ந்துகொண்டே எல்லோருக்கும்

அனுகிரஹமும் ஆசிர்வாதமும்

செய்துகொண்டிருக்கிறார்

என்பதற்கு இதற்கு மேல்

என்ன சான்று வேண்டும்

நான் ஒரு இரண்டு மணி சுமாருக்கு ஸ்வர்ணமால்யாவின் வேலை விஷயமாக மஹாபெரியவா சொன்னதை நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது ஸ்வர்ணமால்யா வேலை விஷயமாக என்னை அழைத்தது மஹாபெரியவா என் நினைவுக்கு கொடுத்த பதில் என்பதில் என்ன சந்தேகம்.

ஸ்வர்ணமால்யா தொடர்ந்து பேசினாள். மாமா எனக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கு. ஆனால் ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு ஆங்கிலத்தில் ஆராய்ச்சியோ அல்லது டாக்டரேட் செய்திருக்க வேண்டும். நான் வெறும் முதுகலை பட்டம் மட்டும் தான் பெற்றிருக்கிறேன். எத்தனை பேர் வருவார்களோ எனக்கு தெரியாது. எனக்கு இந்த வேலை கிடைப்பது மிகவும் கஷ்டம் மாமா. மஹாபெரியவா வேறு தகுதியான வேலைக்கு வழிகாட்டுவார் என்று சொன்னாள். நான் அவளிடம் சொன்னேன்.

மஹாபெரியவா அனுக்கிரஹம் இருந்தால்

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே

நீ நாட்டின் ஜனாபதியாய் கூட ஆகலாம்

நீ நேர்காணலை முடிவித்துவிட்டு எனக்கு முடிவு என்ன என்று சொல்லு என்று வாழ்த்தி கைபேசி தொடர்பை துண்டித்து விட்டேன்..

ஸ்வர்ணமால்யாவைப்போலவே எனக்கும் ஒரே குழப்பமாக இருந்தது. ஆனால் மறுபுறம் மஹாபெரியவாளின் அற்புத விளையாட்டுக்களில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. இந்த நம்பிக்கைக்கு காரணம் மஹாபெரியவா குரு பூஜை அற்புதங்களை தினந்தோறும் அனுபவித்து வருவதுதான். ஆராய்ச்சி, டாக்டரேட், முன் அனுபவம் ஏராளமான போட்டிகள் இத்தனையும் தாண்டி ஸ்வர்ணமால்யாவிற்கு இந்த வேலை கிடைத்து விட்டால் இதுதான் மஹாபெரியவா எனக்கும் ஸ்வர்ணமால்யாவிற்கும் கொடுக்கும் விஸ்வரூப தரிசனம் என்று முடிவு செய்து ஸ்வர்ணமால்யாவின் நேர் கானலின் முடிவுக்காக காத்திருந்தேன்.

திக் திக் வினாடிகள்

மறு நாள் காலை சுமார் பதினோரு மணியளவில் ஸ்வர்ணமால்யா என்னை தொலைபேசியில் அழைத்தாள். நான் பதில் குரல் கொடுக்கும் முன் மஹாபெரியவாளை வேண்டிக்கொண்டு பதில் கொடுத்தேன்.

ஸ்வர்ணமால்யா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். ஸ்வர்ணமால்யா சொன்னது.

"மாமா எனக்கு இந்த வேலை கிடைத்து விட்டது. எப்படி கிடைத்தது என்றே தெரியவில்லை. ஆராய்ச்சி செய்யவில்லை, டாக்டரேடட் வாங்கவில்லை, முன் அனுபவம் கிடையாது நேர் காணலுக்கு வந்த அத்தனை பேரையும் தாண்டி எனக்கு இந்த வேலை கிடைத்தது.. இதுதான் மஹாபெரியவா அற்புதமா மாமா. என்று சொல்லி தொலை பேசியிலேயே அழுதாள்.

பத்து வருட வேலையில்லாத கொடுமை, பேய் படுத்தும் கொடுமை ஊர் பேசும் கொடுமை இப்படி எத்தனையோ சொல்ல முடியாத கொடுமைகள். மஹாபெரியவா உத்தரவுப்படி

அதிஷ்டானம் சென்று திரும்ப வந்து

குரு பூஜை கூட முழுமையாக முடிக்கவில்லை

எழுபத்தி இரண்டு மணி நேரத்தில்

பத்து வருட வாழ்க்கை தலை கீழாக மாறிவிட்டது

ஸ்வர்ணமால்யாவும் மஹாபெரியவாளுக்கு

செல்லக்குழந்தை ஆகி விட்டாள்

எனக்கு சொல்லமுடியாத சந்தோஷம். மஹாபெரியவா என் மூலம் குரு பூஜை செய்ய வைத்து துன்பத்தில் இருக்கும் ஆத்மாக்களை கரையேற்றும் பொறுப்பை எனக்களித்து என் ஜென்ம சாபல்யத்தை அடைய வைத்து விட்டார். நான் வாழும் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்று எனக்கு புரிய வைத்து விட்டார்.

மஹாபெரியவா ஸ்வர்ணமால்யா உயிர் காத்த அற்புதம்

ஸ்வர்ணமால்யா வேலைக்குப்போக ஆரம்பித்து நன்கு ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை.ஒரு நாள் காலையில் ஐந்து மணி சுமாருக்கு மஹாபெரியவா ஸ்வர்ணமால்யாவிற்கு கனவில் தரிசனம் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார். ஸ்வர்ணமால்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

கனவு தரிசனம் வந்து இரண்டு நாட்கள் கழித்து மாலையில் கல்லூரியில் வகுப்புகள் முடிந்து திரும்ப வீட்டிற்கு வந்துகொண்டிருந்தாள்.அப்பொழுது அவளைஅறியாமல் எதிர் புறம் வந்த ஒரு பஸுக்கும் காருக்கும் நடுவில் அகப்பட்டு விட்டாள். இதைப்பார்த்த எல்லோரும் கத்தி விட்டார்கள்.ஏனென்றால் பஸ்சுக்கு அடியில் சக்கரத்தில் போய் விழவேண்டியவள் தன்னையும் அறியாமல் தன்னுடைய இரு சக்கர வண்டியின் பிரேக்கை அழுத்தி விட்டாள்.

வழக்கமாக இந்த மாதிரி சமயத்தில் நம்மையும் அறியாமல் வண்டியின் வேகத்தைத்தான் அதிகரிப்போம். ஆனால் தனையும் அறியாமல் பிரேக் எதுக்கு போட வேண்டும்.ஸ்வர்ணமால்யா தன்னுடைய தெய்வீக அற்புதத்தால் காப்பாற்றப்படுவாள் என்பதை கனவில் வந்து முன்கூட்டியே சொல்லிவிட்டார். மஹாபெரியவாளுக்கு முன்பே தெரிந்திருக்கிறது ஊர் கண்கள் எல்லாம் ஸ்வர்ணமால்யா மேல் தான். ஏகப்பட்ட கண் திருஷ்ட்டி.இருக்காதா பின்னே.

பத்து வருட நரக வாழ்க்கை ஒரு இரவில்

எப்படி நந்தவன வாழ்க்கையாக மாறும்

ஆனால் மாறிவிட்டதே

ஊர் திருஷ்ட்டி இல்லாமல் இருக்குமா

மஹாபெரியவா அனுக்கிரஹம் என்பது

கண் திருஷ்ட்டிக்கும் சேர்த்துதான்

அம்மா அப்பா தாத்தா பாட்டி கூட இவ்வளவு அக்கறை எடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான். ஆனால் மஹாபெரியவா பின்னால் வரக்கூடிய ஆபத்துக்களை கூட முன் கூட்டியே தன்னுடைய ஞான திரிஷ்டியால் அறிந்து உணர்ந்து அனுகிரஹிக்க வேண்டுமானால் மஹாபெரியவா கடவுளுக்கு கடவுள் பெற்றோர்களுக்கு பெற்றோர் இன்னும் எல்லா உறவுகளுக்கும் உறவாக இருந்து நமிடையே வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருந்த ப்ரபஞ்சக்கடவுள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறதல்லவா.

கவலை வேண்டாம் இந்த நொடியில் மஹாபெரியவா நம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம்.

ஆசிர்வாதம் வாங்கிய பாத்திரமும் கனமாக இருக்க

கிடைத்த ஆசிர்வாதமும் இறைவன் கொடுத்ததாக இருக்க

ஸ்வர்ணமால்யா வாழ்க்கை தடைகளை தகர்த்து

வடக்கு வானில் உதிக்கும்

துருவ நட்ஷத்திரமாக ஜொலிக்கப்போவதில்

என்ன ஆச்சர்யம்

உலகுக்கே சூரியன் தூரத்தில் என்றால் என்றால்

ஸ்வர்ணமால்யாவிற்கு மட்டும்

தொட்டுவிடும் தூரத்தில் தான் சூரியன்

ஸ்வர்ணமால்யா தீபம் ஏற்றுவது

தன்னுடைய வீட்டுக்கு மட்டுமல்ல

உலகுக்கும் சேர்த்துதான்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page