top of page
Featured Posts

குரு பூஜை அற்புதங்கள்-011-பாகம்-I- சிவபார்வதி


குரு பூஜை அற்புதங்கள்-011-பாகம்-I- சிவபார்வதி

காயப்படுத்துவதற்க்கு பலர் இருந்தாலும்

சிலர் மருந்தாக இருப்பதால்தான்

நம் வாழ்க்கை

அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது

சரிதானே நான் சொல்வது

நாமும் ஒவ்வொரு வாரமும் மஹாபெரியவாளின் அற்புதச்சாரலில் நனைந்து கொண்டே இருக்கிறோம். எவ்வளவு நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காமல் சின்ன குழந்தைகள் மாதிரி நனைந்து சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டே இருக்கிறோம். மஹாபெரியவாளின் அற்புதச்சாரல்கள் அல்லவா. துன்பங்களும் கவைலைகளும் தனக்கு. இன்பங்களும் சந்தோஷங்களும் நமக்கு. என்ற ஒரு பாசமுள்ள தாய் மஹாபெரியவா.

பசிக்கு சோறு போடுபவள் தாய்

பசித்து விடுமோ என்ற கவலையில்

பார்த்து பார்த்து உணவளிப்பவர்

நம்முடைய மஹாபெரியவா

தாய்க்கும் மேலே ஒருவர் உண்டென்றால்

அது நம் மஹாபெரியவா தான்

இந்த வார அற்புதச்சாரலின் நாயகி சிவபார்வதி. அன்னை பார்வதிக்குள்ள அத்தனை குணங்களும் ஒரு சேர வாய்க்கப்பெற்றவள். விண்ணளவு உயர்ந்தாலும் மண்ணைப்பார்த்து நடக்கும் ஒரு பெண். தனக்கு ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் எதையும் பாராட்டாமல் மற்றவர் துன்பங்களுக்கு இறைவனிடம் முறையிட்டு அழும் ஒரு பெண். வயதில் மூத்தவர்களுக்கும் அனுபவசாலிகளுக்கும் உரிய மரியாதையை கொடுத்து அவர்களின் ஆசியையும் பெற்று சமுதாயத்தில் நன் மதிப்பையும் பெற்ற ஒரு பெண்.

பொதுவாக வீட்டில் நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படித்தான் சமுதாயத்திலும் நம்முடைய பழக்கவழக்கங்கள் இருக்கும். பெற்றோர்களுக்கு கொடுக்கும் மரியாதை அவர்களின் நலனில் காட்டும் அக்கறை இத்தனை நல்லகுணங்களையும் மற்றவர்கள் பார்த்து வியக்கும் ஒரு பெண் சிவபார்வதி.

கைலாயத்தில் சிவபெருமானுடைய பார்வதியை பார்த்திருக்கிறோமோ இல்லையோ நம்முடைய நாயகி சிவபார்வதி கைலாய பார்வதியை ஒத்த பெண். ஆனால் ஒன்று பாத்திடீர்களா அத்தனை பிரபஞ்ச சக்தியையும் ஒருசேர பெற்ற அந்த கடவுளே மனிதனாக அவதரித்து விட்டால் மானுட இனத்தின் அத்தனை வேதனைகளையும் அந்தந்த யுகத்தின் சொல்லவொண்ணா துன்பங்களையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது மனிதப்பிறவிக்கு வகுக்கப்பட்ட இலக்கணம்.

நம் கண் முன்னே காட்சியளிக்கும் காட்சிகள் எத்தனை எத்தனை. இராமாயணத்தில் மகா விஷ்ணுவின் அவதாரமாகிய ராமச்சந்திர மூர்த்தியின் அவதாரமாகிய ஸ்ரீ ராமன் மஹாவிஷ்ணுவின் மனைவி எடுத்த அவதாரம் ஸ்ரீ ராமனின் இல்லத்தரசி சீதா தேவி.

இவர்கள் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் பட்டியலிட்டால் அது முடிவே இல்லாத பட்டியலாகி விடும். ஸ்ரீமன் நாராயணன் அவதரித்த கண்ணன் என்னும் குழந்தை பட்ட கஷ்டங்கள் எத்தனை பிறந்தது சிறைச்சாலையில். கொட்டும் மழையில் நனைந்து கொண்டே தன்னுடைய வளர்ப்புத்தாயை சென்றடைந்தது. இன்னும் எத்தனையோ துன்பங்கள்.

நல்ல விஷயங்கள் மனதில்

கல்வெட்டுக்கள் போல பதியவேண்டுமா

ஒரே விஷயத்தை பலமுறை

சிந்தித்து படியுங்கள்

நீங்கள் நினைப்பது எனக்குப்புரிகிறது. மஹாபெரியவாளின் அற்புதங்களை விட்டுவிட்டு இடையே எதையோ எழுதுகிறேன் என்று நினைக்கிறீர்கள் அல்லவா. நமக்கு பிடித்ததை படிக்கும் பொழுதுதானே நாலு நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடியும். எழுதும் எனக்கும் எழுதின ஒரு திருப்தி படிக்கும் உங்களுக்கும் தெரியாத விஷயங்களை தெரிந்துகொண்ட ஒரு திருப்தி. விஷயங்கள் தெரிந்தே இருந்தாலும் மறுபடியும் தெரிந்துகொள்வதில் தப்பிலேயே.

இப்படித்தான் நம்முடைய கலாச்சார பொக்கிஷங்களை எல்லாம் நம்முடைய மூதாதையர்கள் அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் கவனமாக எடுத்துச்சென்று சேர்த்தார்கள். நாமும் வரும் தலைமுறையினருக்கு கலாச்சார பொக்கிஷங்களை எடுத்துச்சென்று சேர்க்கவேண்டாமா. இது நம் கடமையும் கூட. அல்லவா.

நாமும் பல கடவுள் அவதாரங்களை பற்றி படித்து வணங்கி நம்முடைய அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுகிறோம் . என்றாவது நாம் யோசித்திருப்போமா? எதற்கு இவ்வளவு அவதாரங்கள் என்று. இன்று உங்களுடன் இதற்குண்டான விடையை பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாங்கும் எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு கூட உபயோகிக்கும் முறை என்று ஒரு புத்தகம் தருகிறார்கள் (operative manuals). மனிதன் வாழ்க்கை எவ்வளவு முக்கியம்.அதற்கு வாழும் வழியும் வாழும் முறையும் என்று எந்த மதமாவது சொல்லிக்கொடுக்கிறதா. இல்லையே. நம்முடைய இந்து மதம் ஒன்றுதான் சனாதன தர்மத்தை புராணங்கள் இதிகாசங்கள் மூலம் வாழும் கலையாக போதிக்கிறது.

போதிப்பது மட்டுமல்ல இதிகாசங்கள் புராணங்கள் போதித்த தர்மத்தை கடைப்பிடித்து வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். ராமாயணமும் மகாபாரதமும் இதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.. தர்மத்தை கடைபிடித்து சகோதர பாசத்துடன் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன் ராமாயணத்தின் நாயகன். விளைவுகள் நமக்கெல்லாம் தெரியும்.. அதர்மத்தை கடைப்பிடித்து சகோதர்களை கூட பகைவர்களாய் நினைத்து வாழுந்து காட்டிய துரியோதனன். விளைவுகள் நாம் அறிந்ததே.. உண்மையில் மஹாபாரதத்தில் நாயகன் கண்ணன். சூத்திரதாரி

இதிகாசம், புராணம் என்றல் என்ன. கதையின் நாயகன் வாழ்ந்த காலத்திலேயே எழுதப்பட்ட காவியங்கள் இதிகாசங்கள். புராணங்கள் என்பது கதையின் நாயகன் வாழ்ந்து மறைந்து பிற்காலத்தில் எழுதப்பட்டால் அது புராணம். இதன் மீதியை அடுத்த வாரம் பார்ப்போம்.

இதற்குமேல் சிவபார்வதி புராணம்

இப்பொழுது சிவபார்வதியின் வாழ்க்கைக்கு வருவோம். சிவபார்வதி ஒரு மென்பொறியாளர்.இவர் அண்ணா பல்கலை கழகத்தின் அங்கமான கல்லூரி ஒன்றில் படித்து மென்பொறியாளர் பட்டம் பெற்றவர். இவர் கல்லுரியிலேயே முதல் மதிப்பெண் பெற்று கல்லூரிக்கும் தன்னுடைய பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்த பெண்.

சிவபார்வதி சர்வதேச புகழ் பெற்ற கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கப்பெற்று நல்ல முறையில் வேலை பார்த்து வந்தாள். மிகவும் சீராக சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. வாழ்க்கை எப்படி சீராக செல்லமுடியும். வாழ்க்கை என்றாலே ஏற்ற தாழ்வுகளும் மேடு பள்ளங்களும் நிறைந்ததுதானே. வாழ்க்கை மேடு பள்ளங்களுக்கு காரணமான கர்ம வினைகள் எப்பொழுது எந்த திசையிலிருந்து நம்மை தாக்கும் என்று தெரியாது.

ஆனால் வாழ்க்கையை புரட்டிப்போட்டு சென்ற பின் அதற்கு நாம் வைக்கும் பெயர் கர்ம வினை உண்மை தானே. மஹாபெரியவாளே இந்த கர்மவினையை அனுபவித்திருக்கிறார். இதை பற்றி பின்னர் ஒரு முறை எழுதுகிறேன்.

சிவபார்வதியின் கர்மவினை அவளை எப்படி தாக்கிச்சென்றது என்பதை பார்ப்போம்.சிவபார்வதிக்கு ஒரு குணம் உண்டு. எத்தனை பெரிய பதவியிலிருக்கும் ஆளாக இருந்தாலும் தன்னுடைய எண்ணங்களும் செயல்களும் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சரியாக இருக்குமேயானால் அதை தவறு என்று மற்றவர்கள் சொன்னால் அதை தடுத்து தன்னுடைய எண்ணங்களும் செயல்களும் சரியே என்று சாதிக்கும் பாரதி கண்ட புதுமைப்பெண்.

இப்படித்தான் ஒரு முறை தன்னுடைய அலுவலகத்தில் தனக்கு மேல் இருக்கும் உயர் அதிகாரியை தன்னுடைய செயல் சரியே என்று தன்னுடைய மனசாட்சிப்படி தன்னை நிலைநாட்டிவிட்டாள். இதற்கு கிடைத்த பரிசு சிவபார்வதி தன்னுடைய வேலையே இழந்தாள். காலை தனக்குரிய கார் வந்து தன்னை ஏற்றிக்கொண்டு அலுவலகம் சென்றது. மாலையில் அதே கார் வீட்டில் வந்து இறுதியாக இறக்கிவிட்டு சென்றது.

அன்றிலிருந்து சுமார் ஓராண்டு காலம் காலம் வேலையை இழந்து சமுதாயத்தால் கேலி கிண்டல் பேச்சுக்கு ஆளாகி வாழ்க்கை எல்லையின் முடிவுக்கே சென்று விட்டாள் இந்த வேலையை இழந்து ஓராண்டு காலம் சிவபார்வதி பட்ட கஷ்டங்கள் அனைத்தும் சொல்லி மாளாது.

இந்த ஓராண்டு கால சோதனைகள் அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்துக்கும் வரும் வாரங்களில் எப்படி மஹாபெரியவளின் அறுபுத்தசாரல்கள் பதிலளித்தன என்பதை காண்போம். இந்த வாரம் ஓராண்டு ஆண்டு காலம் வேலையற்ற பெண்ணாக வாழ்ந்தவளுக்கு அத்தனை கட்டுப்பாடுகளை கடந்தும் தளர்த்தியும் மஹாபெரியவா எப்படி வேலை பெற்று தந்தார் என்பதுதான் இந்த வாரம் நாம் நனையப்போகும் அற்புதசாரல்கள்.

சாருகேசி

சிவபார்வதி வாழ்க்கையின் உச்சகட்ட சோகத்திலும் ஏமாற்றத்திலும் வாழ்ந்துகொண்டிருந்த காலம். இந்த சமயத்தில் இறை நம்பிக்கை முற்றிலுமாக இழந்து சமுதாயம் என்றாலே மற்றவர் தோல்வியில் இன்பம் அனுபவிக்கும் கும்பல்தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். சிவபார்வதியின் கல்லூரி கால தோழி. மிகவும் நெருங்கிய சினேகிதி. அந்த தோழியின் பெயர் சாருகேசி. நட்புக்கு இலக்கணமே சாருகேசிதான் என்று சொன்னால் நிச்சயம் அது மிகையில்லை.

சாருகேசி தன்னுடைய வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி என்னை தொடர்பு கொண்டாள். தன்னுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி மஹாபெரியவா குரு பூஜைக்கு உத்தரவாகி பூஜை செய்து கொண்டிருந்தாள்.

சாருகேசியின் விவரங்களை ஏன் இவ்வளவு முன்பே அறிமுகப்படுத்துகிறேன் என்று நீங்கள் நினைப்பது என்னால் உணரமுடிகிறது. இதற்கு காரணம் நட்புக்கு இலக்கணமான சாருகேசிதான் சிவபார்வதி மனம் துவண்டு நம்பிக்கை இழந்திருந்த நேரத்தில் ஊக்கம் கொடுத்து தன்னை ஒரு உதாரணமாக காட்டி ஒவ்வொரு வாரமும் மஹாபெரியவா குரு பூஜை செய்ய வைத்தாள்.

சாருகேசி இந்த முன்னோட்ட அறிமுகத்திற்கு தகுதியானவள் என்பது என் கருத்து. சுயநலத்தை மையமாகக்கொண்டு வாழும் இக்காலத்தில் மற்றவர் நலனிலும் அக்கறை கொண்டு வாழும் ஒரு புனித புண்ணிய ஆத்மா சாருகேசி.

சாருகேசி ஒரு நாள் என்னை தொடர்பு கொண்டு தன்னுடைய பூஜையின் முனேற்றத்தை தெரிவித்து விட்டு தன்னுடைய தோழி சிவபார்வதியின் இத்தனை நேரம் நீங்கள் படித்த அதனை விவரங்களையும் என்னிடம் சொல்லி விட்டு மஹாபெரியவாளிடம் குரு பூஜை உத்தரவு வாங்கிக்கொடுக்குமாறு வேண்டினாள்.

நானும் சரியென்று சொல்லி சிவபார்வதியை ஒருமுறை என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசச்சொல்லவும் என்று கேட்டுக்கொண்டேன். மறு நாளே சிவபார்வதி என்னை தொடர்பு கொண்டாள். குரலில் அந்த சிறு வயத்துக்குண்டான துள்ளலும் இல்லை உற்சாகமும் இல்லை.

எங்கோ ஐநூறு அடி ஆழமான கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் எனக்கு கேட்டது. சிவபார்வதியை தப்பு சொல்ல முடியாது. உடலில் நரம்புகள் நாதம் இழந்து தந்தி அறுந்த வீணை போல இருந்த காலம்.உடம்பில் ஓடும் குருதியில் குதூகலமில்லை. அவள் நிலை அப்படி.. அவளுக்கு உடனடி வேலை ஒன்றுதான் மருந்து என்று எனக்கு பட்டது.

நான் மஹாபெரியவளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன். என்னுடைய பிரார்த்தனை எப்பவுமே நீதிமன்றங்களில் நீதிபதியிடம் வாதம் செய்யும் வழக்கறிஞர் போல இருக்கும். அப்படித்தான் வாதம் செய்வேன் மஹாபெரியவாளிடம் . என்னுடைய பிரார்த்தனை கிழே

பெரியவா, எல்லோருடைய கஷ்டங்களுக்கும் கருணையுள்ளதோடு தீர்வு கொடுக்கும் கருணை சாகரன். இன்று என்னுடைய பிரார்த்தனை சிவபார்வதி என்னும் ஒரு பெண்ணிற்காக. இந்தப்பெண் கடந்த ஓராண்டு காலமாக வேலையை இழந்து சமுதாயத்தின் கேலிப்பேச்சுக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வாழவே பிடிக்காமல் வாழ்ந்து வருகிறாள். உயிரை போக்கிக்கொள்ளும் முயற்சியிலும் சில முறை முயற்சி செய்ந்திருக்கிறாள்.

ஏதோ ஒரு காரணத்திற்காக இன்னும் உயிர் பிழைத்திருக்கிறாள். உங்களுக்கு தெரியாத காரணமில்லை. அவளுக்கு ஒரு தீர்வு வேணும் பெரியவா. நீங்கள்தான் ஒரு நல்ல தீர்வுக்கு வழி சொல்ல வேண்டும் என்று சொல்லி என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன். சிறிது மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா பின் வருமாறு சொன்னார்.

அவளை ஒன்பது வார குரு பூஜை பண்ணச்சொல்லு. எல்லாம் சரியாகி விடும்.என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.

மறு நாள் சிவபார்வதி என்னை தொலைபேசியில் அழைத்தாள். அவள் பேசுவது எனக்கு பாதிக்குமேல் புரியவில்லை. இருந்தாலும் என் அனுமானத்தின் பேரில் பேசியதை இதுவாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து கொள்வேன். அவளிடம் மஹாபெரியவா சொன்ன ஒன்பது வார மஹாபெரியவா குரு பூஜையை பற்றி சொல்லி அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் பூஜை பண்ணச்சொன்னேன்.

நான் முக்கியமாக அவளிடம் சொன்னது ஒவ்வொரு வாரமும் பூஜை முடிந்தவுடன் எனக்கு தெரிவிக்குமாறு சொல்லி இருந்தேன் அப்பொழுதான் வெள்ளிக்கிழமை காலை என்னுடைய பூஜை நேரத்தில் மஹாபெரியவளிடம் நீ செய்த பூஜையை எடுத்துச்சொல்லி உனக்காக வேண்டிக்கொள்ள முடியும் என்று சொன்னேன்.

அவளும் சரி மாமா நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்று சொல்லிவிட்டு என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள். மாமா இந்த ஒன்பது வார பூஜை செய்தால் நிச்சயம் வேலை கிடைக்குமா மாமா என்று ஒரு குழந்தை மாதிரி என்னை கேட்டாள். நன் அவளிடம் சொன்னேன்

"நீ முதலில் முழு நம்பிக்கையுடனும் உருகும் பக்தியுடனும் இந்த மஹாபெரியவா குரு பூஜை செய்து வா. உன்னுடைய பிரார்த்தனையை பின்னுக்கு தள்ளி பக்தியை முன்னிறுத்தி பூஜை செய். மஹாபெரியவா நீ கேட்டதையும் தருவார் கேட்காததையும் தருவார். என்று வாழ்த்துக்களுடன் என் பேச்சை முடித்துக்கொண்டேன். அவளும் சந்தோஷமாக நிச்சயம் பண்ணறேன் மாமா என்று சொல்லிவிட்டு விடை பெற்றாள்.

முதல் வார பூஜையிலிருந்து நான்காவது வார பூஜை வரை

நான் ஒவ்வொரு வரமாக உங்களை அழைத்துச்செல்லாததற்கு காரணம் நான் நிறைய விஷயங்களை இந்த போஸ்டில் சேர்த்து விட்டேன்.உங்களுடைய பொன்னான நேரத்தையும் பொறுமையையும் கருதி சுருக்கமாக விவரித்து ஒன்பதாவது வார பூஜைக்கும் அதையொட்டி வீசிய அற்புதசாரல்களுக்கும் உங்களை நேரே அழைத்து சென்று அனுபவிக்க வைக்கலாம் என்று நினைத்து இப்படி என்னுடைய பதிவுவை செலுத்துகிறேன்.

நீங்களும் என்னுடைய யோசனையை ஆமோதிப்பீர்கள் என்று எனக்கு நிச்சயம் தெரியும்.

முதல் நான்கு வார பூஜையும் சொல்லிக்கொடுத்தாற்போல் நன்றாகவே செய்து முடித்தாள். நான்காவது வார பூஜை முடித்து என்னிடம் கேட்டாள் மாமா வேலை நிச்சயம் கிடைக்குமா என்று. நான் அவளிடம் சொன்னேன் உன்னுடைய நிலையில் நான் இருந்தாலும் இப்படித்தான் கேட்பேன். கவலைப்படாதே மஹாபெரியவா உன்னை கைவிட மாட்டார். இது என் அனுபவ நம்பிக்கை என்று சொன்னேன். அவளும் சரி மாமா என்று சொல்லிவிட்டு விடை பெற்றாள்

ஐந்தாவது வார பூஜை

போன வாரம் நான் நம்பிக்கையுடன் இருக்குமாறு சொன்னதால் இந்த வார பூஜையையும் நன்றாகவே செய்ய முடித்தது அவள் சொன்னதிலிருந்து நான் அறிந்து கொண்டேன்.

ஆறாவது வார பூஜை

இந்த வார பூஜையை சற்று நம்பிக்கை இல்லாமலே செய்து முடித்தாள் சிவபார்வதி இதை அறிந்துகொண்ட நான் அவளுடைய சிநேகிதி சாருகேசியிடம் சிவபார்வதியை கொஞ்சம் நம்பிக்கையுடன் பூஜை செய்யச்சொல்லுமாறு கேட்டுக்கொண்டேன். சாருகேசியும் நிச்சயம் நான் அவளுக்கு சொல்கிறேன் மாமா என்று உறுதி அளித்தாள்.

ஏழாவது வார பூஜை

இந்த ஏழாவது வார பூஜையை மிகவும் நம்பிக்கையில்லாமலே செய்து முடித்தாள் சிவபார்வதி. வெள்ளிக்கிழமை சிவபார்வதிக்கு ஒரு கம்பெனியிலிருந்து நேர் காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. இந்த விஷயத்தை என்னிடமும் சாருகேசியிடமும் சொல்லி விட்டு நேர்காணலுக்கு சென்றாள். நானும் மஹாபெரியவளிடம் மனமுருக வேண்டிக்கொண்டேன்.சாருகேசியும் தந் பங்குக்கு பிரார்த்தனை செய்தாள்.

ஓராண்டுக்கு பிறகு வந்த ஒரு நேர் காணல் அழைப்பு. மிகவும் நம்பிக்கையுடன் சென்றாள் சிவபார்வதி. மாலையில் அவளுடைய அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் அவள் என்னை அழைக்கவில்லை. பதிலுக்கு தோழி சாருகேசியை அழைத்து தான் தோல்வியுற்றதை தெரிவித்தாள். சாருகேசியும் என்னை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தாள்.

எனக்கும் பெருத்த ஏமாற்றம். சாருகேசியிடம் நான் சிவபார்வதியை என்னை தொடர்பு கொண்டு பேசச்சொன்னேன். அவளும் சிவபார்வதியை தொலைபேசியில் அழைத்து விவரத்தை சொல்லி என்னை தொடர்பு கொள்ள அறிவுறித்தினாள். சிவபார்வதியும் இரண்டு நாட்கள் கழித்து திங்கள் கிழமையன்று என்னை அழைத்தாள்.

நான் அவளுக்கு என்னுடைய அனுபவத்தை சொல்லி மஹாபெரியவா அற்புதம் என்பது அடுத்த நொடியாகக்கூட இருக்கலாம். நம்பிக்கையை இழக்காதே. உன்னுடைய மஹாபெரியவா மேல் இருக்கும் நம்பிக்கையை இரட்டிப்பாக்கு. பூஜையை இன்னும் தீவிரமாக்கு. உனக்கு வெற்றி நிச்சயம். சில பல தோல்வியை கொடுத்து உன்னுடைய பக்தியை மஹாபெரியவா சோதிக்கலாம். எனக்கும் இந்த மாதிரி அனுபவம் உண்டு. இந்த மஹாபெரியவா பரிட்சையில் தோற்றுவிடாதே. வெற்றி உனக்கே என்று சொல்லி விடை பெற்றேன்.

எட்டாவது வார பூஜை

இந்த வார பூஜையையும் ஒருவாறு செய்து முடித்தாள்.

ஒன்பதாவது வார பூஜை

இந்த வாரம் வியாழக்கிழமை பூஜையை செய்ய வேண்டும். புதன் கிழமை ஒரு நல்ல கம்பெனியிலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. நானும் சாருகேசியும் வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்தோம். உங்கள் கவனத்திற்கு. இத்தனையும் நேரில் அல்ல. எல்லா விவரங்களையும் தொலைபேசி மூலமாகவே செய்தோம். இன்று வரை சாருகேசியை நேரில் பார்த்தது கூட கிடையாது

காலை பத்து மணிக்கு நேர்காணல் நேரம். மதியம் ஒரு மணிக்கெல்லாம் நானும் சாருகேசியும் சிவபார்வதியின் அழைப்பை எதிர் பார்த்து காத்திருந்தோம்.

மதியம் ஒரு மணி சுமாருக்கு எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. மறு முனையில் சிவபார்வதி. அவளுடைய குரலில் உயிரோட்டம் இல்லை.. மாமா இந்த முறையும் நான் தோற்றுவிட்டேன் அவள் மேலும் சொன்னாள் மாமா எனக்காக நீங்கள் இனிமேல் கஷ்டப்பட வேண்டாம். என்னுடைய தலைவிதி இதுதான் என்று எழுதியிருந்தால் நீங்கள் என்ன செய்யமுடியும்? நான் தான் என்ன செய்ய முடியும்?. எனக்கு வீட்டிற்கு செல்ல தைரியம் இல்லை. எங்கும் போகவும் வழியில்லை.

அவள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தது ஒரு மின்சார ரயில் நிலையத்திலிருந்து. எனக்கு ரயில் கூவுவதும் ரயில் தண்டபாலத்தை கடக்கும் சப்தம் நன்றாகவே கேட்டது இவையெல்லாம் சிவபார்வதி மின்சார ரயில் நிலையத்திலிருந்து பேசுவதை ஊர்ஜிதம் செய்தது.

அவள் கடைசியாக சொன்னது. மாமா எனக்காக நீங்கள் கஷ்டப்பட்டு செய்த ப்ரார்தனைகளுக்கெல்லாம் என்னுடைய நன்றி. என்னை இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது என்று சொல்லி தொலைபேசியை துண்டித்தாள்

எனக்கோ விபரித யோசனைகளும் எண்ணங்களும் தோன்ற ஆரம்பித்து விட்டது. நான் உடனே சாருகேசியை தொலை பேசியில் அழைத்து விவரத்தை சொல்லி என்னுடைய பயத்தையும் அவளிடம் சொன்னேன்.

சாருகேசியும் சிவபார்வதியை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் பலனில்லை மறு முனையிலிருந்து எந்த பதிலும் இல்லை. இறுதியாக வாட்டசாப்பில் மெசேஜ் கொடுத்து பதில் வந்தவுடன் என்னிடம் தெரிவிப்பதாக சொன்னாள்.

இறுதியில் சுமார் எட்டு மணிக்கு சாருகேசி என்னை அழைத்து அவள் வீட்டிற்கு வந்து மயக்கமாக சாப்பிடாமலேயே படுத்து தூங்கி விட்டாள். உங்களை உடனே தொடர்பு கொள்ள சொல்லியிருக்கிறேன்.அவள் நிச்சயம் அழைப்பாள் என்று சொல்லி விடைபெற்றாள்.

எனக்கு மனது சற்று நிம்மதி அடைந்திருந்தாலும் மனம் அமைதி இல்லாமல் தவித்துக்கொண்டெ இருந்தது. எனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் சாப்பாடு சரியான வேலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். வயிறு பசித்தாலும் வாய் உணவை உட்கொள்ள மறுக்கின்றது. என்னுடைய சுபாவம் மற்றவர் கஷ்டங்களை என்னுடைய கஷ்டங்களாக நினைத்து வருத்தப்படுவேன். உடம்பையும் மனதையும் வருத்திக்கொள்வேன். இது என் சுபாவம்.

சிவபார்வதி என்னை புதன்கிழமை இரவு எட்டுமணி முப்பது நிமிடங்களுக்கு அழைத்தாள். மறு முனையில் சிவபார்வதி அழுவது எனக்கு தெரிந்தது. நான் சொன்னேன் "நாளைக்கு ஒன்பதாவது வார பூஜை நிச்சயம் மஹாபெரியவா உன்னை கை விடமாட்டார். நாளைக்கு மட்டும் ஒன்பதாவது வார பூஜையை முடித்து சுமங்கலி பூஜையை முடித்து விடு. அதன் பிறகு எந்த நொடியிலும் உன் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும்.

இது நிச்சயம் என்று சொன்னேன். என்னுடைய பேச்சுக்கு மதிப்பளித்து மறு நாள் வியாழக்கிழமை பூஜை செய்வதாக உறுதியளித்து விட்டு விடைபெற்றாள். நானும் சாப்பிடாமலேயே படுத்துக்கொண்டேன். சிவபார்வதிக்கு வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுவதற்காக அன்று இரவு உபவாசம் இருந்தேன்.ஏனென்று தெரியவில்லை ஒருவருக்கு வாழ்க்கையில் தோல்வி என்றால் அதை என்னுடைய தோல்வியாக நினைத்து மனம் சோர்ந்து விடுவேன்.

ஏனென்றால் எனக்கு தோல்வியின் வலி தெரியும் புரியும் முப்பது ஆண்டுகள் தோல்வி ஒன்றையே சந்தித்து வாழ்க்கையை வாழ்ந்துவந்தேன். என்பேரிலும் சமுதாயத்தின் பேரிலும் நம்பிக்கை இழந்து வாழ்ந்துகொண்டிருந்த நேரம் அது. .இந்த சமயத்தில்தான் மஹாபெரியவா என்னை அழைத்து ஆட்கொண்டார். மீதி உங்களுக்கே தெரியும்

உலகுக்கே கீழ்வானம் செவ்வானமாக பிரகாசித்தது

ஆனால் சிவபார்வதிக்கோ

கீழ்வானம் சோகம் கப்பி அழுதுகொண்டிருந்தது

மறு நாள் வியாழக்கிழமை விடிந்ததது. எனக்கோ மஹாபெரியவா அற்புதத்தை நிச்சயம் நடத்தி விடுவார் என்ற நம்பிக்கை . சிவபார்வதிக்கோ நம்பிக்கையே இல்லாத பூஜை..பூஜை முடித்து மதியம் ஒரு மணிக்கு சுமங்கலி பெண்களுக்கு புடவை மற்றும் ரவிக்கை துணி மற்ற பிரசாதங்கள் எல்லாம் கொடுத்து கீழே விழுந்து நமஸ்காரம் செய்தாள்.

வீசிய மஹாபெரியவாளின் அற்புதச்சரால்

சிவபார்வதி சுமங்கலிகளை விழுந்து நமஸ்காரம் செய்யும் அதே வேலையில் தொலைபேசி மணி அழைத்தது. சிவபார்வதி தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்பொழுதே முகத்தில் ஒரு மலர்ச்சி. என்ன தெரியுமா? எந்த கம்பெனியால் நிராகரிக்கப்பட்டாளோ அதே கம்பெனியிலிருந்து தொலைபேசி அழைப்பு.. சிவபார்வதி தேர்ந்தேடுக்க பட்டவர்களில் ஒருவர் எனவும் நாளை காலை கம்பெனிக்கு வந்து வேலையில் சேர ஆர்டரும் சம்பள விவரங்களையும் தெரிந்து கொண்டு ஒப்புதலையும் கையெழுத்து போட்டு வேலையில் சேரும் நாளையும் தெரிந்து கொண்டு செல்லவும் என்ற அழைப்பு.

இதை என்னவென்று சொல்வது

ஒரு கம்பெனியில் நிராகரிக்கப்பட்டு

அதே கம்பெனி திரும்ப அழைப்பதென்பது

சிபாரிசு இருந்தால் கூட நடக்காதே

இதுதான் மஹாபெரியவளின் விஸ்வரூப தரிசனமோ

என்னுடைய ப்ரார்தனைகளைவிட சிவபார்வதியின் சிநேகிதி சாருகேசியின் பிரார்த்தனையும் அவளின் இடைவிடா முயற்சியும் தான் இந்த அற்புதத்திற்கு முழு முதல் காரணம்

இந்த அற்புதம் எப்பவோ யாருக்கோ நடந்த அற்புதம் அல்ல.நம் கண் முன்னே நேற்று நடந்த அற்புதம். நீங்கள் என்ன உணர்கிறீர்கள். மஹாபெரியவா சித்தி ஆனாலும் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றுதானே. உங்கள் அபிப்ராயம் மிகச்சரியே.

நாம் பேசுவதை காது கொடுத்து கேட்டுக்கொண்டிருக்கிறார்.நம் பிரார்த்தனைக்கு பதிலும் தந்து கொண்டிருக்கிறார். இனிமேல் மஹாபெரியவளை அவர் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து ஒருமுறை கூட தரிசனம் செய்யவில்லையே என்ற ஏக்கமும் வருத்தமும் கவலையும் வேண்டாம்.

நீங்கள் பக்தியுடன் அழைத்தால் உங்கள் கைகளை பிடித்துக்கொண்டு உங்கள் இல்லத்திற்கும் வந்துவிடும் குழந்தை அவர். அன்று பரம்பொருள் கண்ணனே குழந்தையாக அவதரித்து அருள் பாலித்தான். இன்று பரம்பொருள் பரமேஸ்வரனே குழந்தையாக உங்களிடம் உங்களுக்காக அருள் பாலிக்க எந்த நொடியிலும் தயராக இருக்கிறார்.. அன்று ஸ்தூல சரீரத்திற்கு இருந்த கட்டுப்பாடுகள் இன்று சூஷ்ம சரீரத்திற்கு இல்லையே.

இந்த பூலோகத்தின் பூகோளக்கோடுகள் நம்மை பொறுத்தவரை எட்டாதிக்கு. மஹாபெரியவாளை பொறுத்தவரை அது மூச்சு விடும் தூரம் தான்.

அழைத்தவர் குரலுக்கு வருவேன்

என்றான் கண்ணன் அன்று

நினைத்தவர் மனதுக்குள் வருவேன் என்கிறார்

கலியுக கண்ணன் மஹாபெரியவா இன்று

இன்னும் என்ன யோசனை. மஹாபெரியவாளை மனதில் த்யானசெய்யுங்கள் கலியுகக்கண்ணன் மஹாபெரியவாளை உங்கள் பக்தி என்னும் கயிற்றால் கட்டிப்போடுங்கள். கண்ணனை போல. மஹாபெரியவாளும் கண்ணன் தானே. உங்கள் வாழ்க்கையிலும் ஒளி மிளிரட்டும். வசந்தம் வீசட்டும்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

காயத்ரி ராஜகோபால்


No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page