என் வாழ்வில் மஹாபெரியவா-079
என் வாழ்வில் மஹாபெரியவா-079

உறவுகள்
பெற்றோர்கள் குழந்தைகள் உறவுகள்
இரண்டுமே இறைவனிடம் வேண்டி பெறுவதல்ல
நம் கர்ம விதிகளின் படி இறைவன்
ஒரு உறவை கொடுத்து வாழ்ந்துவிட்டு வா
என்று இங்கு அனுப்புகிறான்
இறைவன் கொடுத்த உறவு என்பதற்காக
உங்களை கொண்டாட சொல்லவில்லை
கேலி கூத்தாக்கமால் வாழ்ந்து விட்டு செல்லலாமே
கர்மாவும் கழியும் இறைவனும் மகிழ்வான்
பிறவிப்பிணியில் இருந்தும் விடுதலையும் கிடைக்குமே
சிந்திப்போம் செயல் படுவோம்
உறவுகளை மட்டுமே இறைவன் உருவாக்கி இந்த பூலோகத்திற்கு நம் ஒவ்வொருவரையும் அனுப்புகிறான்.இறைவனின் கருணையை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் இந்த பூவுலகில் வாழ்வதற்கு இரண்டு வாழும் வழிகளை கொடுத்து தான் அனுப்புகிறான். ஒன்று மனது. மற்றொன்று ஆத்மா. மண்ணிற்கும் மனசுக்கும் உறவு. ஆத்மாவுக்கும் ஆண்டவனுக்கும் உறவு.
முடிவு நம் கைகளில். மனதை வைத்தும் வாழலாம். ஆத்மாவை வைத்தும் வாழலாம். நமக்கு ஞானம் இருக்கிறது. ஐம்பது வயது வரை மனதை பிடித்து வாழ்ந்து அனுபவப்படுகிறோம். இவைகளை வைத்து கொண்டு நம்முடைய ஐம்பதாவது வயதிலாவது ஆத்மாவை பிடித்து வாழ்ந்து மேலே இறைவனை நோக்கி பயணிக்கலாமே.
ஒரு மனிதன் இங்கு வந்து ஒரு கற்பதில் விதையுண்டு சிசுவாக மாறி குழந்தையாக பிறக்கிறான். குழந்தையாக பிறந்தவுடன் தான் அந்த குழந்தையின் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் ஜாதகம் என்ற பெயரில் கிரஹங்கள் அணிவகுத்து நிற்க ஆரம்பித்து விடுகின்றன. அங்குதான் அவனுடைய வாழ்க்கையும் தலை விதியும் நிர்ணயிக்கப்படுகின்றன.
.சென்ற ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள் அந்த ஜென்மத்திலேயே நொடிப்பொழுதில் அவ்வப்போது ஒன்பது கிரஹங்களிலும் பதிவாகி விடுகின்றன. இதற்கு பஞ்ச பூதங்களும் சாட்சி. இவைகள் மூலமாக நம்முடைய நல்ல செயல்கள் கெட்ட செயல்கள் எல்லாமே இறைவனை சென்று அடைந்து விடுகின்றன. போன ஜென்மத்தின் பதிவுகளே இந்த ஜென்மத்தில் ஜாதகமாக மாறுகிறது.
இந்த அணிவகுப்பில் நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். இந்த இரண்டுமே கர்மவிதிகளின் படி ஒரு விகிதத்தில் கலந்து இருக்கும்.இதை வைத்துதான் ஜோதிடத்தில் முப்பது வருடங்கள் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடங்கள் தாழ்ந்தவனும் இல்லை என்று சொல்லுவார்கள்
நாம் ஏன் திரும்ப திரும்ப இந்த பூவுலகில் பிறக்கிறோம் தெரியுமா? திரும்பவும் பிறக்காமல் இருப்பதற்காக பிறக்கிறோம். இன்று இந்த ஜென்மத்தில் ஞானம் பிறந்து விட்டதா? இறைவனுக்கு நன்றி சொல்லி இந்த பிறவியில் பெற்ற ஞானத்தை கொண்டு இறைவனின் தாமரை பாதங்களை அடைவது தான் புத்திசாலி தனம்.
இது கலி காலம் தெரிந்தோ தெரியாமலோ பாவங்கள் செய்தால் தான் வாழ முடியும். இன்னும் பிறப்பு எதற்கு ? வேண்டாமே இந்த பாழாய் போன மனித பிறவி. நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று அடைவோம்.
நம்மில் எல்லோருமே கஷ்ட காலங்களில் சொல்லுவோம் "இறைவனுக்கு கண்ணே இல்லையா?. அவன் கொடியவனா ? இல்லை கருணா சாகரனா?
உண்மை தான். கஷ்ட காலங்களில் துன்பங்கள் நம்மை அழுத்தும் பொழுது இந்த வார்த்தைகள் வெளிப்படுவதில்லை. ஆச்சரியம் இல்லை.நாம் சொல்லும் இந்த வார்த்தைகளினால் இறைவன் கொடியவன் என்பது உண்மையாகி விடுமா? நிச்சயம் இல்லை.
இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு உடலை எடுத்துக்கொண்டு பிறக்கிறது. பிறந்து வளர்கிறது.வாழ்கிறது.சராசரியாக ஒவ்வொரு ஆரோக்கியமான உடலுக்கும் சுமார் நூறு ஆண்டுகள் ஆயுள் என்றல் ஆயுளில் பாதி வயது வரை வாழ்கிறேன் என்ற பெயரில் அவமான பட்டு அடி பட்டு மிதி பட்டு பொன் பொருளை இழந்து செய்வதறியாது கைகளை மேலே உயர்த்தி இறைவா என்று அழைக்கும் பொழுது ஒரு ஞானம் மலரும்.
அப்பொழுது மனது கீழ் இறங்கி ஆத்மா மேலோங்கி நிற்கும். அந்த நொடியில் உங்கள் ஆத்மா உங்களை இயக்க ஆரம்பிக்கும். அப்பொழுது நீங்களே இறைவனிடம் சொல்லுவீர்கள்.
இறைவா இத்தனை நாளும் வாழும் வழி தெரியாமல் அனைத்தையும் இழந்து என்னையும் இழந்தேன். என்னை உன்னிடம் கூட்டிச்செல் என்று ஆத்மார்த்தமாக ஓலமிடும் பொழுது அந்த நொடியே இறைவன் உங்கள் கர்ம வினைகளை எரித்து உங்களை தன்னிடம் அழைத்து கொள்வான்.
இந்த ஞானத்தை பயன் படுத்தி இறைவனை நீங்கள் அழைக்கவில்லையென்றால் யோதசித்து பாருங்கள். நீங்கள் இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும்.எடுத்த பிறவிகளில் இன்னும் எத்தனை பாவங்கள் செய்வோமோ ?அந்த பாவங்களை கழிக்க இன்னும் எத்தனை பிறவிகளோ.? இந்த தொடர் சங்கிலியை அறுத்து எரிய வேண்டாமா ?
ஐம்பது வயது வரை பாவங்கள் செய்தவன் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை பாவங்கள் செய்தே தான் வாழ்ந்து கழிக்க வேண்டும் என்று இறைவன் சொல்லவில்லையே. பாவங்கள் செய்து அனுபவ ரீதியாக ஞானம் பெறுவதில் தவறில்லை.. பெற்ற ஞானத்தை வைத்து திருந்தி என்னிடம் வா என்று தானே அழைக்கிறான். இப்பொழுது சொல்லுங்கள் இறைவன் கொடியவனா? இல்லை காருண்ய மூர்த்தியா? நம் தவறுகளை மற்றவர்கள் மேல் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ள நாம் நம் தவறுகளுக்கு இறைவனே காரணம் என்று இறைவன் மேல் பழி போட்டு விடுகிறோம்.
நம் தறுகளுக்கு சிறந்த முறையில் வாதாடும் வழக்குரைஞராகவும் மற்றவர்கள் தவறுகளுக்கு கடுமையாக தீர்ப்பளிக்கும் நீதிபதியாகவும் மாறி விடுகிறோம். இது ஒரு சுய பரிசோதனை. தவறுகளை உனர்வோம். திருந்துவோம்.
இன்னும் இது போல நிறைய இக வாழ்கை புற வாழக்கையை பற்றி எழுதலாம். ஆனால் நான் எழுத வந்ததை விடுத்து தடம் மாற விரும்ப வில்லை..
இனி திருமேற்றளி அற்புதத்திற்கு உங்களை அழைத்து செல்கிறேன்.
நான் யார் என்று தெரிந்ததா?
திருமேற்றளியில் பூஜை முடிந்து இரவு நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு சென்றோம். அன்று காலையில் இருந்தே அலைச்சல் இருந்ததால் அன்று இரவு சீக்கிரமே படுத்து விட்டோம். எனக்கு தூக்கமும் சீக்கிரமே வந்து விட்டது.பத்து மணிக்கெல்லாம் ஆழந்தஉறக்கத்திற்கு சென்று விட்டேன். அப்பொழுது எனக்குள் ஒரு கனவு. கனவில் மஹாபெரியவா தரிசனம். எனக்கும் மஹாபெரியவாளுக்கும் நடந்த சம்பாஷணைகளை உங்களுக்கு வழக்கம் போல் சமர்ப்பிக்கிறேன்.
பெரியவா: என்னடா உனக்கு இன்னிக்கு நீ யாருன்னு தெரிஞ்சதா?
நான் : தெரிஞ்சது பெரியவா.
பெரியவா: என்ன தெரிஞ்சது.
நான்: நீங்கள் ஆசிர்வாதம் செஞ்ச ஆத்மாக்களில் நானும் ஒருவன்.
பெரியவா: போடா அசடே . உனக்கு ஞாபகம் இருக்கா? உன்னை நான் சித்தி ஆவதற்கு முன்னாடி உன்னை ராத்திரி பூராவும் தூங்க விடாம பண்ணி உன்னை காஞ்சிபுரத்திற்கு வரவழைச்சேன்.உன்னை வரவழைச்சு என்னென்ன பண்ணேன்னு உனக்கு தெரியும்.அதுலே ஒன்னு மட்டும் உனக்கு ஞாபக படுத்தறேன்.
உனக்காக காத்தலே இருந்து ரெண்டு மணி நேரம் காத்துண்டு இருந்து நீ வந்தவுடன் உனக்கு ஒரு பச்சை கலர் ஆப்பிளை எடுத்து அர்ச்சனை பண்ணி என்னுடைய சக்தி தபஸ் எல்லாத்தையும் அந்த ஆப்பிள் மூலமா உனக்கு கொடுத்தேன். இப்போ உனக்கு புரிஞ்சிதா.?
நான்: புரிஞ்சுது பெரியவா. இப்போ நான் இதையெல்லாம் சொன்னா உலகம் ஏத்துக்குமா பெரியவா. என்கிட்டே எதுக்குமே ஆதாரம் இல்லையே.
பெரியவா: இதோ பாருடா. இப்போ சொல்லறேன் கேளு. உனக்கு மட்டும் இல்ல இந்த உலகத்துக்கும் சேத்தி தான் சொல்லறேன். உனக்கு பண்ணதையெல்லாம் இப்போ சொல்லறேன் கேளு.
துவாபர யுகத்திலே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை கொடுத்தான். இந்த கலி காலத்தில் நான் உனக்கு குரு பூஜை கொடுத்தேன். இந்த பூஜை கலியின் விகாரங்கள் எல்லாத்துக்குமே பதில் சொல்லும். இத்தனை கோடி பேரில் உன்னை மட்டும் அழச்சு ஏன் குடுத்தேன். கொஞ்சம் யோசிச்சு பாரு. இதுக்கு மேலே என்ன ஆதாரம் வேணும் உனக்கு.
நீ மத்தவாளுக்காக என்கிட்டே அழுது அடம் பிடிச்சு குரு பூஜைக்கு உத்தரவு வாங்கி கொடுத்தே. அவளோட நேர்காணலை எல்லாம் இன்னிக்கு உலகம் பாத்துண்டு இருக்கே. நிச்சயம் சாத்தியமே இல்லை என்ற நிலையில் நான் உனக்காக சாத்தியப்படுத்தி அவாளுக்கு வாழ்க்கை கொடுத்தினே. இது சான்று இல்லையா?
நீ ரெண்டு தரம் யமன் கையிலே போய் உன் முடிந்த ஜென்மாவை திருப்பி கொண்டு வந்தேனே. குழந்தை மாதிரி தவழ்ந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்த உன்னை இன்னிக்கு மொண்டியாவது நடக்க வெச்சு நாலு பேருக்கு நல்ல காரியம் பண்ண வெச்சுருக்கேனே. இதுக்கு மேலே என்ன ஆதாரம் வேணும்.
உன் வாயிலே புற்று நோய் வந்து டாக்டர்கள் எல்லாரும் உனக்கு சரியாகாது. உன்னோட வாழக்கூடிய நாட்களை என்னிக்கோ என்று சொன்னப்புறம் உன்னோட புற்று நோயை ஒண்ணுமே இல்லைனு குணப்படுத்தி உன்னை ஆரோக்கியமா வாழ வெச்சுண்டு இருக்கேனே.இது சான்று இல்லையா?
ஒரு நாள் நீ மத்தவாளுக்கு இதை கொடு அதை கொடுன்னு கேட்டப்போ நான் உன்கிட்டே கேட்டேன். உனக்கு எதுவும் வேண்டாமான்னு. அதுக்கு நீ சொன்னே நான் தான் உன்கூடயே இருக்கேன். எனக்கு ஒன்னும் வேண்டாம்னு சொன்னே.
நானும் ஏதாவது கேளுடா அப்படின்னு சொன்னேன்.நீயும் என்னோட பாதுகை கேட்டே.நான் சித்தி ஆயி இருபத்தி ஐஞ்சு வருஷம் கழிச்சு உன் ஒருத்தனுக்கு தான் பாதுகை குடுத்தேன். அந்த அற்புதம் உனக்கும் தெரியும். இதுக்கு மேலே என்ன ஆதாரம் வேணும்.
உனக்கு சர்க்கரை வியாதி இருக்கு. ரெண்டு தரம் பக்கவாதம் வந்து இடது புறமும் வலது புறமும் பாதிக்க பட்ட போது உன்னோட வலது ;பக்கத்துக்கு சக்தியை கொடுத்து உன்னை நடக்க வெச்சு இன்னிக்கு ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரத்துக்கும் மேலே பிரதி பலன் எதிர்பார்க்கமே மத்தவாளுக்காக உழச்சுண்டு இருக்கியே. இது சாதாரண மனுஷ பிறவி. செய்யக்கூடிய காரியமா. உன்னை செய்ய வெச்சுருக்கேனே. இதுக்கு மேலே என்ன ஆதாரம் வேணும்.
உன்னை ஒரு விரலில் புஸ்தகம் எழுத வெச்சு பக்தர்கள் உலகம் பூரா இன்னிக்கு வாங்கி படிச்சுண்டு இருக்கா. புஸ்தகம் மூலமா வர பணத்தையெல்லாம் இந்த சமுதாய நன்மைக்காக செலவு பன்னரேயே.
ஏழை குழந்தைகளை படிக்கச் வெக்கறே. ஏழை பெண்கள் கல்யாணத்திற்கு தாலி பண்ணி கொடுக்கறே. குடும்பத்தில் சம்பாதிக்கும் தந்தையோ தனயனோ யார் ஒரே ராத்திரியில் இறந்து போய் நடு தெருவில் ஆதரவு இல்லாமல் நிற்கும் குடும்பங்களை கரையேத்தரே. அவாளுக்கு தொலைஞ்சு போன வாழ்க்கையை திருப்பி கொடுத்துருக்கே.
அவாளும் இன்னிக்கு வாழ்ந்துண்டு இருக்கா. ஒரு விரலில் புஸ்தகம் எழுதின நீயும் இருக்கே. இது மேலே என்ன ஆதாரம் வேணும்.நான் வேணா சூஷ்மத்தில் இருக்கேன்.,நீ ஸ்தூல உடம்போட தானே இருக்கே.
நான்னா உலகத்துக்கு எடுத்து சொல்லு. இதுக்கு மேலயும் ஆதாரம் கேட்டா கவலை பாடமே உன்னோட கைங்கர்யத்தை தொடர்ந்து பண்ணு உன்னை நம்பி கனத்த மனசோட வரவாளுக்கு ஆதரவு குடு. வாழ்க்கையில் நம்பிக்கை குடு. அவாளை எல்லாம் வாழ வை. உனக்கு நீதான் வாழும் சான்று.இதை மறந்து விடாதே.
உனக்கு எவ்வளவோ உணவு கட்டுப்பாடுகளை விதிச்சு உன்னை ஒரு சன்யாசியா தயார் பண்ணேன் . உன்னை கிரஹாஸ்ரமத்தில் வெச்சுண்டு ஒரு சந்நியாசிக்கு உண்டான இலக்கணத்தை கொடுத்து இன்னும் உன்னை மாத்திண்டு இருக்கேன்.
குழந்தையில் இருந்து சன்யாசத்துக்கென்றே ஒரு குழுந்தையை உருவாக்குவது சுலபம். ஆனால் ஒரு கிரஹஸ்தனை சன்யாச வாழ்க்கைக்கு மாத்தறது இமாலய முயற்சி. நீயும் இந்த என் முயற்சிக்கு நன்னாவே ஒத்துழைச்சே.
உன்னோட பூர்வ ஜென்ம வாசனைதான் உனக்கு இந்த சன்யாச கோலம். உன்னையும் உன் சன்யாச வாழ்க்கையையும் உலகமே பாத்துண்டு இருக்கு.. இதுக்கு மேல் என்ன சான்று வேணும்.எதை பத்தியும் கவலை பாடமே உன் ஆத்மாவை பிடிச்சுண்டு வாழு. நான் உன்னோடயே இருக்கேன்.
இன்னும் மஹாபெரியவா எத்தனையோ சொல்லிக்கொண்டு இருந்தார். இரவு பதினோரு மணியில் இருந்து அதிகாலை நான்கு மணிவரை மஹாபெரியவா புரிஞ்சுதான்னு கேட்பதும் நான் புரிஞ்சுது பெரியவானு சொல்ரதும் மிகவும் சுவாரசியமான இரவு.
இதுவரை என் வாழ்க்கையில் இவ்வளவு நேரம் சம்பாஷணை நடந்ததே இல்லை. உங்களுக்கு புரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். நானும் புரிந்து கொள்கிறேன். மஹாபெரியவா எனக்கு சொல்லிக்கொடுத்த ஒன்றை உங்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.
வாழக்கையில் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் பணிவும் மனிதமும் சேர்ந்து இருந்தால் தான் உன் உயரத்திற்கு ஒரு மரியாதையும் அர்த்தமும் இருக்கும். உன் உயரத்தை உன் இதயத்தில் வை. அப்பொழுதுதான் அந்த உயரத்தை உன்னால் தக்க வெச்சுக்க முடியும். கர்வமும் தலை கணமும் வந்து விட்டால் உனக்கு அழிவின் ஆரம்பம் வந்து விட்டது என்று அர்த்தம். இது எனக்கும் உங்களுக்கும் இந்த உலகத்திற்கும் தான்.
இன்னும் எழுதிக்கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை.இதோடு எங்கள் சம்பாஷணையை முடித்து கொள்கிறேன்.
அடுத்த வாரம் மஹாபெரியவா என்னை கும்பகோணத்திற்கு தரையில் கால் படாமல் அழைத்து கொண்டு போன அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து விடை பெற்றுக்கொள்கிறேன்.
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
என்றும் உங்கள் நலம் மட்டுமே நாடும்
காயத்ரி ராஜகோபால்