குரு பூஜை அற்புதங்கள்-11-பாகம்-II- சாருகேசி

பிரதி திங்கள் தோறும்
இருவர் அருகில் இருந்தாலும்
இதயங்கள் தூரத்தில் இருக்கின்றன
இதுதான் கலிகால இல்லறமா?
இந்தப்பதிவு சற்று நீண்டு இருக்கும்.இதன் காரணத்தை நேற்றைய ஒரு சிறு பதிவு "உங்கள் கவனத்திற்கு" என்ற தலைப்பில் விளக்கியிருக்கிறேன் நீங்கள் எல்லோரும் அதை பார்த்திருப்பீர்கள் என் நினைக்கிறேன். பார்க்காதவர்கள் நேற்றைய பதிவை படித்து விட்டு இந்தப்பதிவை படியுங்கள்.
சாருகேசியின் முதல் பிரார்த்தனை தன்னுடைய கணவர் தன்னிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும் என்பதுதான். திருமணம் ஆன புதிதில் எல்லா பெண்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். முதலாவது எந்தப்பெண்ணும் ஒரு ஆணும் திருமணத்திற்கு முன் ஒரு கற்பனை வாழ்க்கை வாழ்ந்துவிட்டுதான் திருமண மேடையில் வந்து அமர்வார்கள்.
ஓராயிரம் கனவுகள். இன்னும் சில நிமிடங்களில் கணவனாகப்போகும் அந்த மனிதரை ஒரு கடைக்கண் பார்வை பார்ப்பதும் அந்த மனிதர் அந்த பெண்ணை கடைக்கண் பார்வை பார்ப்பதும் மிகவும் ரசிக்கும் படியான ஒரு காட்சி. தாலி கட்டிய பிறகு இருவரின் சுண்டு விரல்களையும் இணைத்து அக்னி சாட்சியாக வலம் வரும் பொழுது இருவரின் மனதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும். திருமணமான எல்லோருக்குமே இந்த அனுபவம் கிடைத்திருக்கும்.இதில் உங்களுக்கு ஏதும் சந்தேகமா?
நம்முடைய நாயகி சாருகேசிக்கும் இந்த எதிர்பார்ப்புதான். சாருகேசியின் கணவருக்கும் இதே எதிர்பார்ப்புதான்.ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை திருமணமான மறு நாளில் இருந்து இருவருக்கும் இடையில் ஒரு புரிதலின்மை தலை தூக்கியது. சாருகேசியின் கணவருக்கு கடவுள் பக்தி கிடையாது.
சாருகேசியையும் நிர்பந்தப்படுத்த ஆரம்பித்தார். சாருகேசி கோவிலுக்கு செல்லக்கூடாது என்ற கட்டளை. வீட்டிலும் எந்த கடவுள் வழிபாடும் இருக்கக்கூடாது.கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் கூட பரவாயில்லை. கடவுளை இப்படியும் வெறுக்க முடியுமா.
நீயும் பிறந்து விட்டாய்.. இந்த உலகமும் பிறந்து விட்டது. என்றாலே கடவுளும் வந்து விட்டார் என்றுதானே அர்த்தம். கடவுளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் வாழ்ந்து முடித்த ஒரு ஞானியா?. அவரும் ஒரு எலி வேட்டை அறியாத பூனைக்குட்டிதான்.
சாருகேசியும் இந்த முட்டாள்தனமான கடவுள் இல்லை என்று சொல்லும் நம்பிக்கையை கணவருக்காக அப்போதைக்கு ஏற்றுக்கொண்டு தன்னுடைய மனத்திற்குள்ளேயும் திருட்டுத்தனமாகவும் கடவுளை வழிபட ஆரம்பித்தாள்.
குழந்தையிலிருந்து ஏற்றுக்கொண்ட நம்பிக்கை. கணவருக்காக எப்படி விட முடியும். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தன்னுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு தான் சந்தோஷமாக வாழ்வதாக காட்டிக்கொண்டாள். எவ்வளவு நாள் தான் இப்படி நடிக்க முடியும்.சாருகேசிக்கும் இனிமேல் நம்மால் தாங்க முடியாது. என்னுடைய தலைவிதி இவ்வளவுதான் என்று முடிவு செய்து விவாகரத்திற்கு மனதளவில் தயாராகி விட்டாள்.
அப்பொழுது சாருகேசி ஒரு நல்ல மென்பொருள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். மாதம் நல்ல சம்பளமும் வாங்கிக்கொண்டிருந்தாள். இவளைவிட இவள் கணவருக்கு சற்று குறைந்த சம்பளம்தான்.இந்த நிலையில் சாருகேசியின் கணவர் வீட்டில் சாருகேசியை மிகவும் மோசமாக விமர்சிப்பதும் சண்டை போடுவதும் சமயத்தில் கையை முறுக்குவதுமாக இருந்தார்.
ஒரு நாள் இரவில் படுக்கபோகும் முன் சாருகேசிக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார். நாளையிலிருந்து இருந்து நீ வேலைக்கு போகக்கூடாது.நீ வேலைக்கு போனால் உன்னுடைய அம்மா வீட்டிற்கே போய் விடு என்று ஏச்சரித்தார். சாருகேசியும் சரி இந்த வேலையை விட்டலாவது குடும்பம் நன்றாக போகுமா என்ற எதிர்பார்ப்பில் வேலையை விட்டுவிட்டாள்.
வேலையை விட்ட பிறகு சாருகேசிக்கு கையில் பணப்புழக்கம் இல்லாமல் போனது.எதாவது படிப்பதற்கு புத்தகம் வாங்கினால் கூட எப்படி நீ புத்தகம் வாங்கலாம். பணத்தின் கஷ்டம் தெரியுமா உனக்கு. சம்பாதித்து பார். அதன் வலி புரியும் என்று சாருகேசியின் மனதை குத்தி கிளறி ரத்தம் வடியவிடுவது.
சாருகேசியை மிகவும் தந்திரமா வேலையே விட வைத்து கடவுளையும் கும்பிடக்கூடாது என்று ஒரு சட்டத்தை போட்டுஅவளை சிறகொடிந்த பறவையாக்கி வீடு என்னும் கூண்டிற்குள் அடைத்து விட்டார்.
சிறிது காலம் கழித்து சாருகேசிக்கு தெரிய வந்த உண்மை கணவர் எல்லோரிடமும் தான் ஒரு பிரும்மச்சாரி என்றும் கல்யாணம் இன்னும் ஆகவில்லை என்று சொல்லிவருவது தெரிந்தது. தன்னுடைய அலுவலகத்திலும் இப்படித்தான் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பதாக கேள்வி.
சாருகேசிக்கு யாரிடம் சொல்வது. தன்னுடைய மனக்கஷ்டத்தை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்றும் ஒன்றும் புரியவில்லை. புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை. எப்படி பக்குவம் வரும். வாழ ஆரபிப்பதற்கு முன்பே தன்னுடைய திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதில்லை. தான் ஒரு மோசமான நரகத்தில் விழுந்துவிட்டோம் என்று உணர ஆரம்பித்தாள்.
இந்த சமயத்தில் சாருகேசிக்கு எல்லா திருமணமான பெண்களுக்கும் வரும் பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்தது. சாருகேசி எதாவது குடும்ப விஷேங்களுக்கோ வைபவங்களுக்கோ சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி என்ன இன்னும் விசேஷம் இல்லையா.. சாருகேசி என்ன சொல்லுவாள். இன்னும் வாழவே ஆரம்பிக்க வில்லை என்றா சொல்ல முடியும். பேசாமல் மௌனமாக இருந்து விடுவாள்.
இந்த குழந்தை இன்னும் இல்லை என்ற பேச்சு சாருகேசியின் பெற்றோர்களுக்கும் வந்தது. எந்த விசேஷங்களுக்கு சென்றாலும் என்ன இன்னும் பேரனோ பேத்தியோ வரவில்லையா என்ற கேள்வி. இந்த தர்ம சங்கடமும் ஏமாற்றமும் சாருகேசியின் மேல் விழ ஆரம்பித்தது.
சாருகேசியின் பெற்றோர்கள் சாருகேசியை துளைத்தெடுக்க ஆரம்பித்தார்கள்.கேட்கவும் ஆரம்பித்து விட்டார்கள். என்ன தாம்பத்யம் நடக்கிறதா இல்லையா என்று. சாருகேசி தனிமையில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள். இறுதியில் ஒரு முடிவுக்கு தன்னை தயார் படுத்தி கொண்டாள்.. தன்னுடைய வீட்டிலும் மாமனார் வீட்டிலும் யாரிடமும் சொல்லாது யாரும் இல்லாத கண்காணாத இடத்திற்கு சென்று விடுவது என்று முடிவு செய்தாள்.
திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வீட்டில் ஒரு குழந்தை இல்லை என்ற ஏமாற்றமான நிலையில் வாழ்கையும் தனக்கு வாய்க்க வில்லை என்ற ஏமாற்றமும் சேர்ந்து கொண்டு சாருகேசியை அதர பாதாளத்திற்கு கொண்டு சென்றது.
இந்த சமயத்தில் சாருகேசியின் கணவருக்கு ஒரு ஆறு மாதம் கனடா செல்ல அவரது அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இந்த செய்தியை கேள்விப்பட்ட சாருகேசிக்கு வானமே தன்னுடைய தலையில் இடிந்து விழுவது போல் இருந்தது. தாம்பத்தியம் இதுவரை இல்லை.அதனால் குழந்தை இல்லை.
தன்னுடைய கணவரோ எல்லோரிடமும் தான் ஒரு திருமணமாகாத பிரும்மச்சாரி என்று வேறு சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனக்கு இன்னும் குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை என்று எப்படி தன்னுடைய பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் சொல்லுவாள்.
தன்னுடைய வாழ்க்கையில் இருக்கும் எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டதை உணர்ந்தாள் சாருகேசி. சாருகேசி தனிமையை ஏற்றுக்கொண்டு தன்னுடைய அறையின் விட்டத்தை பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
நீங்களும் ஒரு தாயாக தகப்பனாக சகோதர சகோதரியாக இருந்து யோசித்துப்பாருங்கள்.
தனிமையை அவளே எடுத்துக்கொண்டால் அது இனிமை.
தனிமை கொடுக்கப்பட்டாலோ திணிக்கப்பட்டாலோ அது கொடுமை.
தனிமை என்ற கொடுமையில் தன்னந்தனியாக ஏமாற்றத்தின் உச்சத்தில் வாழ்ந்து வந்து கொண்டிருந்த காலமது.
அப்பொழுது நான் வேறு ஒரு இணைய தளத்தில் மஹாபெரியவா அற்புதங்களை பற்றியும் குரு பூஜை மகிமைகள் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தேன். அந்த தனிமை வாழ்க்கையில் சாருகேசிக்கு கடவுளை அழைப்பது தவிர வேரு வழி தெரியவில்லை.
கடவுளை துணைக்கு அழைக்க ஆரம்பித்தாள்.கடவுள் சாருகேசிக்கு காட்டியது அந்த இணையதளமும் அதில் நான் எழுதிய மஹாபெரியவா குரு பூஜையும் தான். சாருகேசி எப்படியோ என்னுடைய தொலைபேசி எண்களை பெற்றுக்கொண்டு என்னிடம் தன்னுடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தாள்.
ஒரு சமயத்தில் தான் விவாகரத்திற்கு தயாராகி விட்டதாகவும் அதுவும் முடியவில்லை என்றால் கண் காணாமல் எங்காவது சென்று விட முடிவு செய்து விட்டதாகவும் என்னிடம் சொன்னாள். மேலும் அவள் சொன்னது என்னுடைய அப்பா அம்மா விடம் சொல்ல முடியவில்லை.
என்னுடைய மாமியாரோ தன்னுடைய மகனைப்போல் ஒரு சாந்தமான நியாயமான மனிதன் கிடையாது என்பது போல் பேசி சாருகேசியின் மரணத்தை தழுவும் முடிவு சரியே என்பது போல் எரிகின்ற நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றுவது. புண் பட்ட மனதில் உப்பை தடவுவது போன்ற செயலை கல் மனதுடன் ஒரு சீரியல் மாமியார் போல செய்துகொண்டிருந்தாள். மாமனாரோ உடல் நிலை சரியில்லாதவர். அவர் சாருகேசிக்கு சாதகமாக என்ன பேசிவிட முடியும்.
தன்னுடைய மகன் வாழமுடியாவிட்டாலும் மருமகள் தாலியறுத்தால் போதும் என்ற ஒரு அரக்கத்தனமான ஒரு சீரியல் மாமியார். இப்பொழுது உங்களுக்கெல்லாம் ஒன்று புரிகிறதா. சீரியல் என்ற பெயரில் எவ்வளவு பேர் வாழ்க்கை அழிந்துகொண்டிருக்கிறது.
மற்றவர்கள் வாழ்க்கையை எண்ணெய் ஊற்றி எரித்து அந்த தீயில்தான் அடுத்த வீட்டு அடுப்பு எரியணுமா., இதுதான் வாழ்க்கையா. இன்னும் எத்தனையோ சாருகேசிகளின் வாழ்க்கை தீர்வில்லாத ஒரு தீப்பந்தமாய் எரிந்துகொண்டிருந்தது. நான் சீரியலை குறை சொல்லவில்லை.
எத்தனையோ அழிந்துபோன நம் பாரம்பரியங்கள் இருக்கின்றன. அதன் முக்கியத்துவத்தை உணர வைக்க சீரியல் எடுங்களேன்.உதாரணமாக கூட்டுக்குடும்பம் நல்ல பழக்கவழக்கங்கள் இவைகளை பற்றி சீரியல் எடுங்களேன். வீட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு சீரியல் மூலம் ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டால் கொடுமைகள் குறையுமா? கூடுமா?. சற்று சிந்தித்து பாருங்கள்
வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. குடும்பங்கள் குலைய வேண்டாம். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். அந்த ஆயிரம் காலத்து பயிரின் வேரில் ஒரே நாளில் வெந்நீரை ஊற்றாதீர்கள். இந்தக்கொடுமைக்கு யாரும் குரல் கொடுப்பதாய் தெரியவில்லை. நானாவது குரல் கொடுக்கிறேன். என் குரலில் நியாயம் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் என் குரலுடன் உங்கள் குரலையும் சேருங்கள்.
குரல் உயரட்டும் கொடுமைகள் குறையட்டும்.கொடுமைகள் குறைந்தால் விவகாரத்துக்கள் குறையும். குடும்பம் செழிக்கும். குடும்பம் செழித்தால் சமுதாயம் செழிக்கும்.சமுதாயம் செழித்தால் தனிமனித வாழ்க்கை வளப்படும். தனிமனிதன் மனம் பண்பாட்டால் சமுதாய கலாச்சாரம் ஒரு நல்ல பண்பட்ட சமுதாயமாக மாறும். ஒரு நல்ல கலாச்சாரத்திற்கு வழிவகுப்போமே. சின்னஞ்சிறுசுகள் நன்றாக வாழட்டுமே.
இந்த சமயத்தில் தான் சாருகேசி என்னை தொடர்பு கொண்டு நான் உங்களுக்கு கூறிய அணைத்து விஷயங்களையும் என்னிடம் சொன்னாள்.
நான் அவளிடம் சொன்னேன். நீ உன் பெற்றோர்களிடம் சொல்லமுடியவில்லை என்ற கவலை வேண்டாம்., என்னையே உன்னுடைய தந்தையாக நினைத்துக்கொள். ஒரு தந்தையிடம் என்னென்ன சொல்லவேண்டும் என்று நினைக்கிறாயோ அதையெல்லாம் என்னிடம் சொல். உனக்கு எப்பொழுதெல்லாம் உன் அப்பாவிடம் பேசவேண்டும் என்று தோணுகிறதோ அப்பழுதெலாம் என்னிடம் பேசு.. அழ வேண்டுமா என்னிடம் அழு. உன்னுடைய மனபாரம் குறையும்.
நானும் மஹாபெரியவாளிடம் உன்னுடைய கவலைகளையும் அதற்கு காரணமான பிரச்சனைகளையும் அவர் பொற்பாதங்களில் சமர்ப்பித்து உனக்கு ஒரு தீர்வு வாங்கிக்கொடுக்கிறேன். நாளை காலை என்னுடைய பிரும்ம முகூர்த்த நேர பிரார்த்தனையின் பொழுது உன்னுடைய பிரார்த்தனைகளை முதலாவதாக சமர்ப்பித்து வேண்டிக்கொள்கிறேன்.கவலை வேண்டாம். நீ மஹாபெரியவா இறை சாம்ராஜ்யத்திற்குள் வந்து விட்டாய். நாளை பிரார்த்தனை முடிந்தவுடன் நான் உனக்கு விவரங்கள் சொல்கிறேன் என்று சொல்லி விடை பெற்றேன்.
மறு நாள் காலையில் என்னுடைய வழக்கமான பிரும்ம முகூர்த்த பிரார்த்தனை நேரத்தில் மஹாபெரியவாளிடம் சாருகேசி சார்பில் நான் பிரார்த்தனையை பின்வருமாறு சமர்பித்தேன்.
"பெரியவா உங்களது இறை சாம்ராஜ்யத்திற்கு ஒரு ஆத்மாவின் புதிய வரவு. தீர்வே கிடைக்காத தன்னுடைய வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வேண்டி நிற்கிறாள். நம்பிக்கையற்று போன வாழ்க்கை கடவுள் நம்பிக்கை இல்லாத கணவன் தான் செய்வது அநியாயம் என்று தெரியாமலேயே தப்பும் தவறுமாக வாழ்க்கையை என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
திருமணம் ஆகி ஐந்து வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை பெரியவா. தாம்பத்யமே நடக்கவில்லை. பின் எப்படி குழந்தை வரும் பெரியவா. அவளுடைய கணவனை திருத்தி சாருகேசி மேல் பிரியம் உள்ளவனாக மாற்ற வேண்டும் பெரியவா. நீங்கள் நினைத்தால் ஒரு நொடிப்பொழுதில் அவளுக்கு தீர்வு கிடைக்கும். கொஞ்சம் தயவு செய்து உங்கள் கருணை உள்ளத்தில் அவளுக்கு ஒரு இடம் கொடுங்கள் பெரியவா என்று சொல்லி என் பிரார்த்தனையை முடித்துக்கொண்டேன்.
சிறிது மௌனத்திற்கு பிறகு மஹாபெரியவா சொன்னது
“அவளை என்னுடைய குரு பூஜை ஒன்பது வாரத்திற்கு பண்ணச்சொல்.எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி தன்னுடைய பதிலை முடித்துக்கொண்டார்.
இனி சாருகேசி செய்த மஹாபெரியவா குரு பூஜைக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன்.
முதல் வார பூஜைக்கு முன் நடந்த அற்புதம்
முதல் வார குரு பூஜைக்கு முதல் நாள் மஹாபெரியவா படம் கிடைக்காமல் அந்த சின்ன ஊரில் தவித்துக்கொண்டிருந்தாள். சாருகேசி அப்பொழுதே சரணாகதி தத்துவத்தை கடைபிடிக்க ஆரம்பித்து விட்டாள். ஒரு வினாடி கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டாள்.
பெரியவா நாளை காலை பிரும்ம முகூர்த்தத்தில் நான் உங்கள் பூஜை செய்ய வேண்டும். அதற்கு உங்கள் படம் இங்கு எங்குமே கிடைக்கவில்லை. கொஞ்சம் அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று வேண்டிக்கொண்டு தன்னுடைய சகோதரர் இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு கடையாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
என்ன ஆச்சர்யம் முதலில் பார்த்த கடைகளில் ஒரு படங்கள் கூட இல்லை. வேண்டிக்கொண்ட மறு வினாடி அதே கடைகளில் வெளியில் கண்ணாடிப்பெட்டியில் வைத்துள்ள மஹாபெரியவா படம் கண்ணில் பட கண்களில் கண்ணீர் பெறுக அந்தப்படத்தை வாங்கிகொண்டாள்.
ஒன்று முதல் மூன்றாவது வார பூஜையின் பலன்கள்
முதல் மூன்று வார பூஜைக்கு வார்த்தைகளால் வடிக்கமுடியாத அற்புதங்கள் நிறைவேறின. இத்தனை நாளும் தனக்கு ஒரு சீரியல் வில்லியாக இருந்த தன்னுடைய மாமியாரை சொந்தங்களும் சுற்றங்களும் சேர்ந்து கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் வீட்டில் ஒரு மழலை சப்தம் கூட கேட்கவில்லை. ஒரு அம்மாவாக நீ என்ன முயற்சி எடுத்தாய்
எப்பொழுது பார்த்தாலும் மருமகளை வசை பாடிக்கொண்டும் உன்னுடைய பையன்செய்யும் தவறுக்கெல்லாம் ஒரு நியாயம் சொல்லிக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை ஏன் பாழாக்குகிறாய். இப்படி இருப்பதற்கா கல்யாணம் செய்து வைத்தாய்.என்று கேள்வி மேல் கேள்விக்கு கேட்க மாமனாருக்கும் சற்று உரைக்க ஆரம்பித்தது.நாம் தவறு செய்கிறோம் என்பதை உணர ஆரம்பித்தார்கள்.அவர்கள் பேச்சில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.கொடுமைகள் குறைந்தன வார்த்தை வன்முறைகள் கண்ணுக்கு தெரிய குறைய ஆரம்பித்ததன.
நான்காவது வாரம் முதல் ஆறாவது வாரம் வரை
இந்த மூன்று வாரங்களிலும் கணவர் கனடாவில் இருந்து பேசும்பொழுது வழக்கமாக வரும் சண்டைகள் இல்லை வார்த்தை வன்முறைகள் இல்லை.சாருகேசி கணவரின் மாற்றத்தை நன்கு உணர்ந்தாள். ஆனால் சாருகேசிக்கு ஒரு பயம். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டால் என்ன செய்வது.
நான் சாருகேசிக்கு மஹாபெரியவாளை வழிபடும் முறையை சொல்லிகொடுத்திருக்கிறேன். எப்பொழுதெல்லாம் மனது நிம்மதி இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் மஹாபெரியவா முன் ஒரு விளக்கேற்றி வைத்து கீழே அமர்ந்து த்யானம் செய்யுமாறு சொல்லியிருக்கிறேன்.
அப்படி ஒரு பத்து நிமிடம் தியானம் செய்தால் மனது லேசாகி ஒரு அசாத்திய தைரியம் வந்துவிடும். இதே போல் அவளுக்கு எப்பொழுதெல்லாம் மனது நிம்மதி இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் தியானத்தில் அமர்ந்து விடுவாள்.
இந்த மூன்று வாரமும் இப்படியே கழிந்தன. ஆனால் சாருகேசியிடம் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டது. கணவரின் குணத்தை மஹாபெரியவா நிச்சயம் சரி செய்து விடுவார் என்று நம்பினாள்.
ஏழாவது வாரம் முதல் எட்டாவது வாரம் வரை.
இந்த இரண்டு வாரங்களில் கணவரின் முன்னேற்றத்தில் இன்னும் சற்று நம்பிக்கை கூடியிருந்தது. சாருகேசி தனக்கும் வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. அந்த வாழ்க்கைக்கு மஹாபெரியவா நிச்சயம் துணையாக இருப்பார் என்று நம்பினாள்.
ஒன்பதாவது வாரம்
இது வரை சாருகேசி ஒரு வாரம் கூட விடாமல் மஹாபெரியவா குரு பூஜை செய்து விட்டாள். பெண்களுக்கு வரும் மாதாந்திர விலக்கு கூட இவளுக்கு தடையாக இல்லை. பூஜை முடிந்தவாவுடனோ அல்லது பூஜைக்கு முன் குளித்து விடுவாள்.இது ஒரு அற்புதம் இல்லையா. எட்டு வாரமும் இப்படியா இருக்கும்.
ஆனால் ஒன்பதாவது வாரத்தில் கணவர் காலையில் வந்து விடுவார். கணவர் வந்துவிட்டால் ஒன்பதாவது வார பூஜை தடைப்படும். சாருகேசிக்கு இருப்பு கொள்ளவில்லை. என்னை அழைத்து தன்னுடைய ஒன்பதாவது வார பூஜை தடை படாமல் இருக்க மஹாபெரியவாளை வேண்டிக்கொள்ளச்சொன்னாள்
நானும் மஹாபெரியவாளிடம் பின்வருமாறு வேண்டிக்கொண்டேன்.
"பெரியவா கடந்த எட்டு வாரங்களாக சாருகேசியை உங்களுடைய குரு பூஜையை தடைப்படாமல் செய்ய வைத்தீர்கள். நாளை ஒன்பதாவது வார பூஜை முடித்தாக வேண்டும். சாருகேசியின் கணவர் வந்து விட்டால் பூஜை செய்ய முடியாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதை உங்களிடம் முன்னமே சொல்லியிருக்கிறேன். அவள் ஒன்பதாவது வார பூஜையை தடையில்லாமல் செய்து முடிக்க அனுக்கிரஹம் செய்யுங்கள் பெரியவா என்று வேண்டிக்கொண்டு மௌனமாக நின்றேன்.
சிறிது மௌனத்திற்கு பிறகு அவள் ஒன்பதாவது வார பூஜையையும் தடையில்லாமல் செய்வாள் என்று சொன்னார். இந்த செய்தியை சாருகேசியிடம் பூஜைக்கு முதல் நாள் சொன்னேன். அதற்கு அவள் அது எப்படி சாத்தியம் மாமா நாளைக்கு காலையில் வீட்டிற்கு வந்து விடுவார். இது எப்படி சாத்தியமாகும் என்று என்னிடம் கேட்டாள்.
அதற்கு நான் சொன்னேன். எனக்கு ஒன்னும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மஹாபெரியவா சொல்லிவிட்டால் அது நூற்றுக்கு நூறு நடந்து விடும். இது மட்டும் தான் எனக்கு தெரியும்.நீ கவலைப்படாமல் பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டு தூங்கு என்று சொன்னே
மறு காலை நான் வழக்கமாக எழுந்திருக்கும் நேரமான நான்கு மணிக்கு என் கைபேசி என்னை அழைத்தது. மறு முனையில் சாருகேசி. அவளுக்கு விடியற்காலை மூன்று மணி சுமாருக்கு அவளுடைய கணவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. வந்த செய்தி இதுதான். அவர் அமெரிக்காவில் பிடிக்க வேண்டிய விமானத்தை தவற விட்டுவிட்டார். ஆகவே நாளை இரவுதான் இங்கு வருகிறார். நானும் குளித்து விட்டு மஹாபெரியவா குரு பூஜைக்கு ஏற்பாடு செய்கிறேன் மாமா.
என்னிடம் கேட்டாள் இது எப்படி மாமா சாத்தியமாயிற்று.எனக்கு ஒண்ணுமே புரியலை என்று சொன்னாள். நானும் அவளிடம் சொன்னேன் மஹாபெரியவா என்ன சொல்கிறார். எப்பொழுது சொல்கிறார். காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நடந்து முடிந்தவுடன் எல்லோருக்கும் புரியும். எனக்கும் அப்பொழுதான் புரியும். என்று சொல்லி விடை பெற்றேன்
சாருகேசி எதற்கும் முன்னேற்பாடாக ஜாக்கிரதையாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து அவைகளை மறைத்து வைத்து விட்டு உறங்கிவிட்டாள். இதற்கு பிறகு சாருகேசி ஒன்பதாவது பூஜையை முடித்து விட்டு என்னை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினாள். மாமா மஹாபெரியவா சொன்னபடி ஒன்பதாவது வார பூஜையை முடித்து விட்டேன் என்றாள். தொலை பேசியில் சாருகேசி அழ நானும் மஹாபெரியவாளிடம் அழ ஒன்பதாவது வார பூஜையை மஹாபெரியவா எந்தவிதமான தடையும் இல்லாமல் முடித்தாள்.
இரவு கணவர் விமானத்தில் வந்து இறங்கி தன்னுடைய மனைவி சாருகேசியை கட்டிப்பிடித்து அவளுக்கென்று பிரத்தியேகமாக வாங்கிய மடிக்கணியயை அவள் மடியில் வைத்து விட்டு அவள் மனக்கஷ்டம் படும் அளவிற்கு இத்தனை நாளும் பேசியதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பும் கேட்டார்.
இருவரும் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு இதயமே வெடித்து அழுதார்கள்.அன்றிலிருந்து தினமும் கணவர் அலுவலகத்தில் இருந்து வந்தவுடன் சாருகேசியை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கூட்டிச்செல்வதும் அவளுக்கு பிடித்ததை வாங்கி தருவதும் இன்னும் எவ்வளவோ எழுதலாம்.இத்தனை நாளும் தவறவிட்ட அன்பு பாசம் எல்லாவற்றையும் இருவரும் சேர்ந்து கொட்டிதீர்த்தர்கள்.
எப்படியெல்லாமோ இருந்த வாழ்க்கை இப்பொழுது மஹாபெரியவா குரு பூஜையின் விளைவாக நல்ல புரிதலும் இருவருக்குமிடையே அன்னியோன்யமும் வந்து இன்று வரை வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.
இதில் என்னுடைய பிரார்த்தனையை விட சாருகேசியின் அசைக்கமுடியாத மஹாபெரியவா நம்பிக்கையும் பக்தியும் மட்டுமே பலன் அளித்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
வலியோடு போராடினால்தான் ஒரு பெண் தாயாக முடியும்
இருளோடு போராடினால்தான் ஒரு புழு வண்ணத்துப்பூசி ஆகமுடியும்.
மண்ணோடு போராடினால்தான் விதை மரமாக முடியும்
வழக்கையோடு போராடினால்தான் வரலாறு படைக்க முடியும்
மஹாபெரியவா குரு பூஜை ஒவ்வொருவர் வாழ்விலும்
வரலாறு படைத்துக்கொண்டிருக்கிறது
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்