குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II- “சங்கரன்” சித்தி “காமாட்சி”

சரணாலயம் பெரியவா
குரு பூஜை அற்புதங்கள்-12-பாகம்-II-
“சங்கரன்” சித்தி “காமாட்சி”
பிரதி திங்கள் தோறும்
உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பணிவு என்பது பெரும் பண்பாகும்
இவையனைத்தும் கொண்டவன் மனித வடிவில் தெய்வமாகிறான்
இந்த மனிதர்கள் ஆண்டவனே வாழும் வெள்ளை இதயம் கொண்டவர்கள்
சங்கரனும் வசந்த கல்யாணி குடும்பமும் வெள்ளை இதயம்
கொண்ட கோவில்கள்
வாழ்க்கையின் சுவாரஸ்யமே நாளை என்ன என்பது தெரியாமல் இருக்கும் வரைதான். ஆனால் இந்த குடும்பத்திற்கு மட்டும் கடவுள் இன்று போல் என்றும் வாழ்க என்று தலையில் எழுதிவிட்டான். கஷ்டம் துன்பம் வறுமை.
இந்த சமயத்தில்தான் வசந்தகல்யாணி என்னை தொடர்பு கொண்டு மஹாபெரியவாளிடம் குரு பூஜைக்கு உத்தரவு வாங்கித்தருமாறு என்னை கேட்டுக்கொண்டாள்..சென்ற வாரம் முதல் வார பூஜையோடு உங்களை காக்க வைத்திருந்தேன். இந்த வாரம் உங்களை மீண்டும் வாரா வாரம் குரு பூஜைக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.
இரண்டாவது வாரம்:
சங்கரனும் வசந்தகல்யாணியும் செய்துகொண்டிருக்கும் மஹாபெரியவா குரு பூஜையை பற்றி கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இவர்கள் வீட்டிற்கு வந்து மஹாபெரியவா குரு பூஜையில் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இன்றும் அதுபோலத்தான்.
ஆனால் சென்ற வாரத்தைவிட இந்தவாரம் கூட்டம் சற்று கூடியிருந்தது. முதல் நாள் இரவு பத்து மணிக்குத்தான் கொண்டைக்கடலை இல்லை என்பதை உணர்ந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றனர். கொட்டுகின்ற மழை.
கண்ணைப்பறிக்கும் மின்னலும் இடியும்.எப்படியும் பூஜை செய்துவிடுவது என்ற முடிவோடு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் சென்று ஏதேனும் கடை திறந்திருக்கிறதா என்று பார்த்தார்கள். மின்சாரம் கிடையாது.தெருவில் ஒரு ஆள் அரவம் கிடையாது.ஆனால் மனதிற்குள் பூஜையை எப்பாடுபட்டாவது செய்தாக வேண்டும் ஒரு தீராத வெறி. மஹாபெரியவா சந்தோஷப்படவேண்டாமா?.அலைந்தார்கள்.
எல்லா கடைகளும் அடக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.கடைசியாக இவர்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டில் கதவை தட்டி கொண்டைக்கடலை கிடைக்குமா என்று கேட்டு அவர்களும் தங்களிடம் சுமாராக ஐம்பது கொண்டைக்கடலை மட்டுமே இருக்கும் என்று இருப்பதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு கொடுத்தனுப்பினார்கள். இருக்கும் கொண்டைக்கடலையோ சுமாராக ஐம்பது. தேவைப்படுவது நூற்றியெட்டு.அதுவும் கடலை உடையாமல் கோர்க்க முடிந்தால்.
உடனே மஹாபெரியவாளிடம் மன்னிப்பு கேட்டு இந்த வாரம் இருக்கும் கொண்டை கடலையில் மாலை போட்டுவிடுகிறோம்.மீதியை நாளை கடை திறந்தவுடன் வாங்கி போட்டுவிடுகிறோம் என்று மன்றாடினார்கள்.
இதோ இன்னொரு சான்று மஹாபெரியவா கருணாசாகரன் என்பதற்கு.
பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள கடலையை ஒரு காகிதத்தில் கொட்டி எண்ண ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சர்யம் கொண்டைக்கடலையின் எண்ணிக்கை நூற்றி பத்து. கடலையை தண்ணீர்ல ஊறப்போட்டு மறுநாள் காலை மஹாபெரியவளுக்கு கொடைகடலை மாலை தயார். இந்த மாதிரி ஒரு பக்திக்கு மஹாபெரியவா மனமிறங்காமல் போய்விடுவாரா.
மூன்றாவது வாரமும் நான்காவது வாரமும்:
இந்த இரு வாரங்களும் வழக்கமான உற்சாகத்துடனும் பக்தியோடும் பூஜையை செய்து முடித்தனர். அக்கம்பக்கத்தினரும் வழக்கம்போல் பூஜையில் கலந்து கொண்டனர்.
ஐந்தாவது வாரம்:
இன்றும் கொட்டும் மழை. இடி மின்னல்.வீட்டிற்குள் மழைத்தண்ணீர் கொட்டுகிறது. இரவு மஹாபெரியவாளை ஒரு மேஜை மேல் வைத்து ஒரு சிறிய அறையில் வைத்துவிட்டனர். வீட்டில் எல்லா இடங்களிலும் ஒழுகும்பொழுது எங்கு வைப்பது. இவர்களே வீட்டிற்குள் மழை தண்ணீர் கொட்டும்பொழுது நனையாமல் இருக்க வீட்டை விட்டு வெளியே வந்துவிடுவார்கள்.
இரவு முழுவதும் தூங்கினார்களோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் காலை நான்கு மணிக்கு பூஜை செய்து விட வேண்டும் என்ற உந்துதல் யார் கொடுத்தார்களோ தெரியவில்லை.(யார் கொடுத்திருப்பார்கள் சாஃஷாத் அந்த மஹாபெரியவா தான்.) எல்லோரும் குளித்துவிட்டு மஹாபெரியவாளை வைத்திருந்த அறையில் இருந்து மஹாபெரியவாளை எடுத்து வீட்டின் சமையல் அறையில் வைத்துதான் பூஜையை துவங்கவேண்டும்.
இப்பொழுது மஹாபெரியவாளை வைத்திருந்த அறைக்கு சென்றனர். என்ன ஆச்சர்யம். வீட்டின் எல்லா பகுதியும் தண்ணீர். ஆனால் மஹாபெரியவா அமர்ந்திருந்த மேஜையை சுற்றிலும் தண்ணீரே இல்லாமல் மிகவும் சுத்தமாக இருந்தது. அப்பொழுதே மஹாபெரியவா முடிவு செய்துவிட்டார். இந்தக்குடும்பத்தில் ஐவரோடு இன்றிலிருந்து நானும் சேர்ந்து அறுவரானோம். புரிகிறதா இராமாயணத்தில் குகனையும் சேர்த்து இன்றிலிருந்து நாம் ஐவரானோம் என்று ராமர் சொல்லுகிறார் அதுபோல் மஹாபெரியவா சொல்லாமல் சொல்லிவிட்டார்.
ஆறாவது வாரம் :
முதல் நாள் இரவு வசந்த கல்யாணி கடைதெரு சென்று மஹாபெரியவாளுக்கு சம்பங்கி பூக்கள் வாங்கி மாலையாக போடவேண்டும் என்று நினைத்து சம்பங்கி பூக்கள் விலை கேட்டவுடன் சம்பங்கி பூக்களை தன்னால் வாங்க முடியாது என்று முடிவு செய்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி விட்டாள்.
நீங்கள் ஒன்று கவனத்தீர்களா. வயிறு பசியால் வாடுகிறது. தன்னுடைய வயிற்றை பற்றி கவலைப்படாமல் மஹாபெரியவாளுக்கு சம்பங்கி பூ மாலை போடவேண்டும் என்று நினைத்தால் இந்த பக்தியை என்னவென்று சொல்வது. இந்த மாதிரி ஒரு பக்தர் இருந்தால் அந்த பரமேஸ்வரன் மஹாபெரியவா தானே கீழே இறங்கிவந்து கேட்டதையும் கொடுப்பார். கேட்காததையும் கொடுப்பார். இவர்களுக்கு கொடுத்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது.
வழக்கமாக நாம் நம்முடைய பக்தியை மதிப்பீடு செய்யும்பொழுது அகிலத்திலேயே நம்மைப்போல் பக்தி செய்பவர் யாருமில்லை என்று நினைப்போம். இவர்கள் காண்பிக்கும் பக்தியை நம்முடைய பக்திக்கு ஒரு அளவுகோலாக வைத்துக்கொண்டாலும் தவறில்லை.
ஏழாவது வாரம்:
இந்த வாரம் சங்கரன் மாலை அலுவலகத்திலிருந்து வந்துதான் மஹாபெரியவா குரு பூஜை செய்யவேண்டும். சரியான மழை. வீட்டில் மின்சாரம் இல்லை. ஒரு விளக்குகூட இல்லை. விளக்கு இல்லாவிட்டால் என்ன. மனமிருந்தால் மார்க்கமுண்டு. சங்கரன் அந்த இருட்டிலேயே நடுக்கும் குளிரில் குளித்துவிட்டு மஹாபெரியவாளுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு தன்னுடைய குரு பூஜையை ஆரம்பித்தான்.
சங்கரன் சாப்பிட்டானா இல்லையா தெரியவில்லை. அவனுக்கு பசியையும் மீறி மஹாபெரியவா பக்தி.
சங்கரனும் மனிதன்தானே. என்னதான் பசியோடு மஹாபெரியவாளை ப்ரதக்ஷிணம் செய்தாலும் ஒரு வினாடி நினைத்தான்.
மஹாபெரியவா, இன்னும் எத்தனை நாளுக்கு இந்த கொடுமை. எனக்கு மட்டும் ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டால் என்னுடைய சித்திமார்களையும் என் அம்மாவையும் நல்லமுறையில் இனிமேலாவது துன்பமில்லாத வாழ்க்கை வாழவைப்பேனே .என்று நினைத்தான்.
இந்த எண்ணங்கள் சங்கரன் மனதில் அலைமோதும்பொழுது சங்கரன் தோடாகக்ஷ்டகம் ஏழாவது சுலோகம் சொல்லிக்கொண்டிருந்தான். நினைத்து முடிக்கவில்லை., மின்சாரம் வந்துவிட்டது. சிலர் நினைக்கலாம் இது ஒரு தற்செயலாக நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்று. உங்கள் கவனத்திற்கு நடக்கவிருக்கும் ஒன்பதாவது வார மஹாபெரியவா குரு பூஜை அற்புதத்திற்கு மஹாபெரியவா இப்பொழுதே கட்டியம் கூறி விட்டார் என்பதை உணர்வீர்கள்.
எட்டாவது வாரம்:
இந்த வாரம் காலையில் பூஜையை முடித்துவிட்டு சாப்பிடப்போன சங்கரனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு. சென்ற மாதம் ஒரு கம்பெனிக்கு நேர்காணலுக்கு சென்று சங்கரன் தேர்ந்தெடுக்கப்படாமல் தோல்வியுற்றவர்கள் பட்டியயலில் இருந்த சங்கரனுக்கு மீண்டும் அழைப்பு.
இரண்டாவது நேர்காணலுக்கு வருமாறு.சங்கரன் அழுதே விட்டான். என்னை தொலைபேசியில் அழைத்து விவரங்களை சொல்லி அழுதான். நான் அவனிடம் சொன்னேன் மஹாபெரியவா உன்னை முன்பே தேர்ந்ததுவிட்டார். இந்த நேர்காணல் ஒரு கண்ணதுடைப்பு நாடகம்.நீ வெற்றி பெற்று விட்டாய்.
உன்னுடன் மஹாபெரியவா கூடவே வருவார். நேர்காணலில் உன் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார். ஏதற்கும் அசராமல் பதில் சொல்லு. எந்த நிலையிலும் கலங்காதே. இந்த வேலை உனக்குத்தான்.என்று வாழ்த்தி சங்கரனை நேர்காணலுக்கு அனுப்பினேன்.
நேர்காணல் ஏறக்குறைய ஒரு மணி முப்பது நிமிடங்கள் நடந்தன. முதலில் சில கேள்விகளுக்கு திணறினாலும் நான் சொன்ன மஹாபெரியவா உன் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார் என்பதை மனதில் வைத்துக்கொண்டு கண்ணை மூடிக்குகொண்டு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான் சங்கரன். முடிவில் சங்கரன் தேர்வாகிவிட்டான்.
இந்த கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டால் சங்கரனுடைய வாழ்க்கை மட்டுமல்ல தன்னுடைய சித்தி மார்களுக்கும் வாழ்க்கை கிடைத்து விட்டதாகவே அர்த்தம். இது ஒரு பன்னாட்டு நிறுவனம். முதல் முறை தேர்வாகாமல் அதே கம்பெனியில் இரண்டாவது முறை தேர்வாவது என்பது மஹாபெரியவா கம்பெனி நிர்வாகியாக இருந்தாலொழிய முடியாது.
ஆமாம் அந்த நேர்காணல் நேரமான இரண்டு மணிநேரம் மட்டும் மஹாபெரியவா கம்பெனி நிர்வாகியாக இருந்து சங்கரனுக்கு வேலை வாங்கி கொடுத்து விட்டு சங்கரன் கையை பிடித்துக்கொண்டு சங்கரனுடன் வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் இனிமேல் இருக்கப்போவது சங்கரனுடனும் அவன் சித்தி வசந்த கல்யாணி மற்றும் அவள் சகோதரிகளுடன்தானே. இதை என்றோ மஹாபெரியவா முடிவு செய்துவிட்டார்.
ஒன்பதாவது வாரம்:
வழக்கமாக சங்கரன் பெரும்பாலும் காலை ஆறு மணிக்கு பிறகோ அல்லது இரவோதான் பூஜை செய்வான். இன்று மட்டும் காலையிலேயே பிரும்ம முகூர்த்தத்தில் எழுந்து விட்டான். ஆனால் இன்று அவனால் முடியவில்லை. ஆகவே தன்னுடைய படுக்கையில் மீண்டும் சென்று படுத்து விட்டான். வழக்கமாக செல்லும் கம்பெனிக்கு அன்று வேலைக்கு செல்லவில்லை.
மஹாபெரியவா எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். அர்த்தமும் இருக்கும்.இதை நீங்கள் நிச்சயம் உணரவேண்டும். காரணமில்லாமல் மஹாபெரியவா எதையும் செய்யமாட்டார். நடந்துமுடிந்தபின் நமக்கு எல்லாமே தெரியவரும்.அப்பொழுது நம் கண்கள் மட்டும் கலங்காது. இதயமும் சேர்ந்து அழும்.நம் மன சாட்சியே நம்மை கொன்று விடும்.
பொதுவாக நான்கு பிரார்த்தனைகளில் மூன்றுக்கு நல்ல தீர்வு கிடைத்து ஒரு பிரார்த்தனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மஹாபெரியவளை வசை பாடுவதும் என்னை திட்டுவதும் எந்த விதத்திலும் நியாயமே இல்லை. மஹாபெரியவா கருணா சாகரன். நானும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பக்தர்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாக வைத்துக்கொண்டு நாள் ஒன்றுக்கு பதினேழு மணிநேரம் உழைக்கிறேன்.
பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கவில்லையென்றால் அதற்கு எனக்கு தெரியாத கரணங்கள் எத்தனையோ இருக்கலாம். நான் கடும் சொற்களை வாங்கிக்கொண்டு மறு நாள் காலை அவர்களின் நலனுக்காக பரிசுத்தமான இதயத்துடனும் தூய்மையான எண்ணங்களுடனும் பிரார்த்தனை செய்வேன்.
இனி சங்கரனனின் விஷயத்திற்கு வருவோம்.
அன்று காலையில் தாமதமாக எழுந்ததால் சங்கரன் அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. நான் சில வரிகளுக்கு முன் சொல்லியிருந்தேன் .மஹாபெரியவா எது செய்தலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். அது நடந்து முடிந்த பின்புதான் தெரியும் என்று. இதோ அதற்குண்டான காரணம்.சங்கரனுக்கு சங்கரன் தேர்வாகி இருந்த கம்பெனியில் இருந்து தொலைபேசி அழைப்பு. சங்கரனுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்வது பற்றியும் வேலையில் சேர்வது பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டன.
சங்கரனின் வருட சம்பளம் பற்றியும் தெரிவிக்கப்பட்டன. வருட சம்பளம் எவ்வளவு தெரியுமா. நான்கரை லக்க்ஷம் (4.5 lakhs) வருடத்திற்கு. எனக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.மஹாபெரியவாளிடம் சென்று கதறி அழுது சம்பள விவரத்தையும் சொன்னேன்.
மஹாபெரியவா பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் சொன்னார்."அவா இன்னும் சம்பளம் அதிகம் குடுப்பாடா." எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு முறை கம்பெனி சொல்லிவிட்டால் அதை யாராலும் மற்ற முடியாது. அவர்களுக்கென்று ஒரு வரையறை இருக்கும்.இருந்தாலும் மஹாபெரியவா சொல்லிவிட்டார்.பொறுத்திருந்து பார்ப்போம் என்று என்னுடைய வேறு வேலைகளை பார்க்கத்தொடங்கினேன்.
மறு நாள் மதியம் எனக்கு சங்கரனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. விவரம் இதுதான். சங்கரனுடைய சம்பளம் நான்கரை லக்க்ஷத்திலிருந்து ஏழரை லக்க்ஷத்திற்கு உயர்த்தி வழங்குவதாக தெரிவித்தார்கள். இதற்கு மேல் ப்ரத்யக்க்ஷ தரிசனம் வேண்டுமா. இப்பொழுது புரிகிறதா
"நான் இருக்கேன் " என்ற வாசகத்தின் அர்த்தம் இது வெறும் வாசகம் இல்லை.மஹாபெரியவாளின் திருவாசகம். மஹாபெரியவா மேல் உருகும் பக்தி அசைக்கமுடியாத நம்பிக்கையிருந்தால் எல்லோருமே சங்கரன்தான். வசந்த கல்யாணிதான்.
நேரில் முகம் பார்த்துக்கொடுக்கும்
உறுதி மொழிகள் காற்றில் பறக்கும் இந்த கலியுகத்தில்
முகம் பார்க்காமல் சூஷ்மமாய் இருந்து
கொடுக்கும் வார்த்தைகளுக்கு இப்படியொரு மரியாதையா
நடந்துவிடுகிறதே இப்பொழுது புரிகிறதா
"நான் இருக்கேன்"
என்ற வாசகத்தின் அர்த்தம்
மஹாபெரியவா
சதுர் யுகங்களையும் கடந்த கடவுள்
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
காயத்ரி ராஜகோபால்